சிவமொக்கா: கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா மாவட்டத்தின் சிகாரிப்புரா வட்டத்தைச் சேர்ந்த சன்னகேசவா நகரைச் சேர்ந்தவர் குண்டப்பா.
குண்டப்பா அப்பகுதியில் வித்யா என்ற பெயரில் மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தநிலையில், அவர் மருத்துவம் படிக்காமலேயே நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதாக கடந்த 2013ஆம் ஆண்டு சிகாரிப்புரா காவல்துறையினருக்கு புகார் சென்றது.
காவல்துறை விசாரணையில், மருத்துவம் படிக்காமலேயே குண்டப்பா கிளினிக் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் குண்டப்பாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பிறகு அவர் பிணையில் வெளியானார். இதுதொடர்பான வழக்கு சிவமொக்கா மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்த நீதிபதி, குண்டப்பாவுக்கு 6 மாத சிறைதண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.