இம்பால்: மணிப்பூரில் முன்னதாக கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களைக் காட்டும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது. அந்தக் கொலை தொடர்பாக சிபிஐ 4 பேரைக் கைது செய்துள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் கடந்த ஞாயிற்றுக் கிழமை தெரிவித்தார். கைது செய்யப்பட்ட நால்வரும் குகி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிறப்பு விமானம் மூலம் கவுகாத்திக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்கு குக்கி - ஜோமி அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இந்தக் கைது நடவடிக்கைகளை அந்த அமைப்புகள், இது கைதல்ல கடத்தல் என்று குறிப்பிட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பழங்குடியினத் தலைவர்கள் மன்றம் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தது.
இதுகுறித்து பேசிய முதல்வர் பிரேன் சிங், “குற்றவாளிகளைக் கைதுசெய்ய நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் கொலையில் தொடர்புடைய மற்றவர்களைக் கண்டுபிடிப்பதற்கும், அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கும் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்,“ என்று கூறினார்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்ட குகி இன இளையர்களை 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால், மணிப்பூரின் அனைத்து மலை மாவட்டங்களிலும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்,” என்று குக்கி-சோமி அமைப்புகளைச் சேர்ந்தோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.