இம்பால்: மணிப்பூரின் இம்பால் நகரத்தின் மேற்குப் பகுதியில் திடீரென வன்செயல் வெடித்ததாகவும் இரண்டு வீடுகள் எரிக்கப்பட்டதாகவும் காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
துப்பாக்கிக் குண்டுகள் பலமுறை வெடித்ததாகவும் அது கூறியது. இந்தப் புதிய வன்செயல் சம்பவம் புதன்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு நிகழ்ந்தது. அந்தப் பகுதியில் பதற்றத்தைக் கிளப்பிவிட்டுவிட்டு மர்மநபர்கள் ஓடிவிட்டார்கள்.
தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்புப் படையினரும் தீயை அணைத்தனர்.
அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் இப்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்தது.
மணிப்பூரில் இரண்டு தரப்புகளுக்கு இடையில் பிரச்சினை கிளம்பியதை அடுத்து மே மாதம் 3ஆம் தேதி முதல் பெரிய அளவில் வன்செயல்கள் வெடித்தன.
180க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டனர். ஏராளமானவர்கள் காயமடைந்துவிட்டனர். பெரிய அளவில் சொத்து சேதம் ஏற்பட்டுவிட்டது.