புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலத்தில் ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 12ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.
அக்போபர் 12ஆம் தேதி, இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு உத்தராகண்ட் மாநிலத்துக்கு அவர் செல்வார். உத்தராகண்டின் அல்மோராவில் அமைந்துள்ள ஜாகேஷ்வர் தாம் பகுதியில் இருந்து அவர் தமது பயணத்தைத் தொடங்குவார்.
ஜாகேஷ்வர் தாமில் கடல் மட்டத்திலிருந்து 6,200 அடி உயரத்தில் ஒரு கோயில் அமைந்துள்ளது.
அங்கு நடைபெறும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் திரு மோடி, அப்பகுதியின் சுற்றுலா வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் பல அறிவிப்புகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து பித்தோரகர் பகுதிக்குச் செல்வார். அங்கு ரூ.4,194 கோடியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைப்பார். மேலும் சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
உத்தராகண்ட் மாநிலச் சுற்றுலா மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.
உத்தராகண்ட் மாநிலச் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு இந்த நலத்திட்டங்கள் மிகப் பெரிய தூண்டுதலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.