பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆறு, குளங்களில் புனித நீராடியபோது நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர்.
பீகார் மாநிலத்தில் ஜிவித்புத்ரிகா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆறுகள், குளங்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். தங்களது குழந்தைகள் நலமுடன் நீண்ட நாள் வாழ்வதற்காக இந்த விழாவை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற புனித நீராடலின்போது வெவ்வேறு இடங்களில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
போஜ்பூர், ஜெனாபாத், பாட்னாவின் ரோஹ்டாஸ், தர்பாங்கா, நவாடா, மதேப்புரா, அவுங்கபாத் ஆகிய இடங்களில் புனித நீராடலின்போது 22 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அளிக்க அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.