புதுச்சேரி: புதுச்சேரியின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி விலகுவதாக புதுச்சேரி முதல்வருக்கு தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் அவர், “வன்னியர் மற்றும் தலித் சமூகங்களைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் தம் மக்களுக்காக அயராது பாடுபட்டு வருகின்றனர்.
அச்சமூகங்கள் மேலும் மேம்பட காழ்ப்புணர்ச்சியில்லாத அரசியலை உறுதிசெய்ய காலியாகும் இந்த அமைச்சர் பதவியை வன்னியர், தலித் அல்லது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு அளித்து நியாயமளிக்க வேண்டும்.
மக்கள் பின்புலம் இல்லாவிட்டாலும் பணத் திமிராலும் அதிகார செல்வாக்காலும் பதவிக்கு வரத் துடிப்பவர்களுக்கு இப்பதவியைக் கொடுத்து பெரும்பான்மையாக உள்ள வன்னியர், தலித் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டாம்,” என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார்.