புதுடெல்லி: இந்தியா விரைவில் சர்க்கரை (சீனி) ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் இதன் தொடர்பில் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டில் சர்க்கரை இருப்பு மேம்படும் பட்சத்தில் சில வெளிநாட்டு விற்பனைக்கு வரம்பு விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
இந்தியாவில் கரும்பு விளைச்சல் சரியில்லை. அதனால் இந்தப் பருவத்தில் இந்தியா சர்க்கரையை ஏற்றுமதி செய்யாது என்று சென்ற மாதம் புளூம்பர்க் நிறுவனம் நடத்திய ஆய்வில் கலந்துகொண்ட 14 பகுப்பாய்வாளர்களும் வியாபாரிகளும் ஆலை உரிமையாளர்களும் தெரிவித்தனர்.
உலகில் சர்க்கரை ஏற்றுமதியில் இந்தியா முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஆகையால், அது சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதித்தால் உலகளவில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கும் பருவத்தில் இந்தியா சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் இதன் தொடர்பிலான அறிவிப்பு நவம்பர் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் செப்டம்பர் 28ஆம் தேதி மணிகன்ட்ரோல் என்ற வர்த்தக செய்தித்தளம் கூறியது.
இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்குப் பருவமழை இப்போது சரியில்லாமல் போய்விட்டது.
அடுத்த ஆண்டில் தேர்தல் வருகிறது. இந்த நிலையில், வேளாண் உற்பத்தியில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அது இந்திய அரசாங்கத்திற்குப் பெரும் பிரச்சினையை உருவாக்கும் என்று கணிக்கப்படுகிறது.
இவற்றைக் கருத்தில்கொண்டு உள்நாட்டு சர்க்கரை இருப்பை உறுதிப்படுத்தவே அரசாங்கம் முயலும் என்றும் கரும்பு உற்பத்தி சரியில்லாத நிலையில் சர்க்கரை ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிப்பதைத் தவிர இந்தியாவிற்கு வேறு வழியில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.