புதுடெல்லி: உலகளாவிய பட்டினிக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 28.7 புள்ளிகள் பெற்று 111வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு அது 107வது இடத்தில் இருந்தது.
உலக நாடுகளில் மக்களிடையே பட்டினி நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆய்வுசெய்து ஆண்டுதோறும் இந்தக் குறியீட்டுப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இந்த ஆண்டு 125 நாடுகள் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கான பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
இந்தியா 28.7 புள்ளிகள் பெற்றிருப்பது, நாட்டில் பட்டினியின் அளவு தீவிரமாக இருப்பதைக் குறிக்கிறது.
இந்த ஆண்டு பாகிஸ்தான் 102வது இடத்திலும் பங்ளாதேஷ் 81வது இடத்திலும் நேப்பாளம் 69வது இடத்திலும் இலங்கை 60வது இடத்திலும் உள்ளன. இந்த நாடுகள் இந்தியாவைவிட சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன.
நாட்டில் உள்ள குழந்தைகளின் உயரத்துக்கேற்ற எடையைக் கணக்கிட்டதில் இந்தியக் குழந்தைகளிடையே ஊட்டச்சத்துப் பற்றாக்குறை அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.