திருப்பதி: ஆந்திரா மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
பாஜகவுடன் அவரது தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி திடீரென குரல் கொடுத்துள்ளது.
அது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் இண்டியா கூட்டணியில் சேர சந்திரபாபு நாயுடுவுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்ததாகவும் மாலை மலர் தெரிவிக்கிறது.
இது குறித்துப் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சிந்தாமோகன், சந்திரபாபு நாயுடு மிகவும் நல்ல மனிதர். சகிப்புத்தன்மையின் எல்லைக்கு அப்பால் முன்னாள் முதல்வரான அவரை ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொந்தரவு செய்வது அநியாயமாகும். சந்திரபாபு நாயுடுவை உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
“ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசமும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் சேர வேண்டும். அவ்வாறு சேர்ந்தால் அரசியல் உறவு பலனளிக்கும்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது ஆந்திராவில் காங்கிரஸ் வாக்கு வங்கி 10 விழுக்காடு முதல் 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
“தெலுங்கானா மாநிலத்தில் 75 சட்டமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும். ஓபிசி பிரிவினருக்கு உடனடியாக அரசியல் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் ஓபிசியினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக 2005ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தத்தை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது,” என்று சிந்தாமோகன் தெரிவித்தார்.