அய்ஸ்வால்: இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் இடம்பெறவிருக்கிறது.
மொத்தம் 40 தொகுதிகளுக்கான இத்தேர்தலில் 174 பேர் களமிறங்குகின்றனர்.
வேட்பாளர்கள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களின் அடிப்படையில் அவர்களில் 112 பேருக்கு ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 64.4 விழுக்காட்டு வேட்பாளர்கள் பணக்காரர்கள்.
இவர்களில் ஆக அதிகப் பணக்காரர் ஆம் ஆத்மி கட்சியின் மிசோரம் மாநிலத் தலைவர் ஆண்ட்ரூ லால்ரெம்கிமா பச்சுவா. இவரது சொத்து மதிப்பு 70 கோடி ரூபாய். இவர் அய்ஸ்வால் வடக்கு மூன்றாவது தொகுதியில் போட்டியிடுகிறார்.
மிசோரம் சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர்களில் 16 பேர் பெண்கள். இவர்களில் காங்கிரஸ் வேட்பாளர் மரியம் எல். ஹிராங்சால் ஆகப் பணக்காரர். இவரது சொத்து மதிப்பு 18.63 கோடி ரூபாய். இவர் லுங்லே தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், செர்ச்சிப் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ராம்லன் எடோனோவின் சொத்து மதிப்பு 1,500 ரூபாய் எனத் தெரியவந்துள்ளது. இவர்தான் ஆக ஏழை வேட்பாளராவார்.