பெங்களூரு: பெங்களூரு கன்னிங்காம் சாலையில் வசிக்கும் மருத்துவர் ஒருவர், இணைய மோசடியில் 90 லட்சம் ரூபாய் பணத்தை இழந்தார்.
கடந்த சில மாதங்களுக்குமுன், இணையச் செயலி மூலம் பங்குச் சந்தையில் முதலீடு செய்வது குறித்து இவரது கைப்பேசிக்குக் குறுந்தகவல் ஒன்று வந்தது.
அதன்மூலம் லாபம் ஈட்ட எண்ணிய மருத்துவர், செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் அந்தச் செயலி வாயிலாக முதலீடு செய்யத் தொடங்கினார்.
அக்டோபர் 4ஆம் தேதி வரை பல தவணைகளில் 90 லட்சம் ரூபாயை அவர் அவ்வாறு முதலீடு செய்தார்.
இதன்மூலம் மருத்துவர் 40 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியதாக அந்தச் செயலியில் தெரிவிக்கப்பட்டது. அந்த லாபத்தொகையைக் கேட்டபோது அதற்கு வழிகாட்டுதல் கட்டணமாக எட்டு லட்சம் ரூபாய் செலுத்தச் சொன்னார்கள்.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்ட மருத்துவர் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை இதன் தொடர்பில் விசாரித்துவருகிறது.