புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை நிர்ணயிக்கும் உரத்துறையின் யோசனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அக்டோபர் 1ஆம் தேதி முதல் 2024 மார்ச் 31ஆம் தேதி வரையிலான ‘ரபி’ பருவத்திற்கான உர மானியம் குறித்து அக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
அதையடுத்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் பேசினார்.
‘ரபி’ பருவத்தில், ஊட்டச்சத்து அடிப்படையில் பல்வேறு வகையான உரங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மானியத் தொகை குறித்து அவர் தெரிவித்தார்.
மேலும், ‘ரபி’ பருவத்தில், பாஸ்பேட்டிக் மற்றும் பொட்டாசிக் உரங்களுக்கான மானியமாக 22,303 கோடி வழங்கப்படும் என்றார் அவர்.
‘காரிப்’ பருவத்தில் உர மானியமாக ரூ.38 ஆயிரம் கோடி வழங்கப்பட்டது.
அனைத்துலக அளவில் உரங்களின் விலை உயர்ந்தபோதிலும், மானியம் கொடுத்து பழைய விலைக்கே விவசாயிகளுக்கு உரம் கிடைக்கச்செய்ய மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
விவசாயிகளுக்குப் போதிய உரங்கள், நியாயமான விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். கடந்த நிதிஆண்டில், உர மானியமாக ரூ. 255,000 கோடி வழங்கப்பட்டதை அவர் சுட்டினார்.