திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் காரணமாக பரபரப்பு நிலவியது. விசாரணையில் 12 வயதுச் சிறுவன்தான் இம்மிரட்டலை விடுத்தான் எனத் தெரியவந்தது.
வியாழக்கிழமை கேரள மாநில காவல்துறையின் தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு அந்தக் கொலை மிரட்டல் அழைப்பு வந்தது. அதில் பேசியவர், கேரள முதல்வருக்கு மிரட்டல் விடுத்தார்.
அந்த அழைப்பு வந்த தொலைபேசி எண் குறித்து காவல்துறையினர் உடனடியாக விசாரணை மேற்கொண்டனர். அதில், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 12 வயதுச் சிறுவன்தான் மிரட்டல் விடுத்தான் என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்தது.
சிறுவன் தவறுதலாக காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டதாக அவனது பெற்றோர் மன்னிப்புக் கோரியுள்ள நிலையில், காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.