புதுடெல்லி: ஐரோப்பாவில் தொடர் வளர்ச்சி உத்தியின் ஓர் அங்கமாக, பல்கேரியத் தலைநகர் சோஃபியாவில் புதிய தரவு நிலையத்தைத் திறக்கப் போவதாக இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸ் அறிவித்துள்ளது.
புதிய நிலையம் 500 ஊழியர்களை ஈர்த்து, மறுதிறன் பயிற்சி அளிக்க உதவும் என இன்ஃபோசிஸ் கூறியது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்த ஊழியர்கள் அடுத்த தலைமுறை மின்னிலக்கத் தொழில்நுட்பம் தொடர்பான உலகளாவிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வர்.
பல்கேரியாவிலும் ஐரோப்பாவின் பல பகுதிகளிலும் நிதிச் சேவை, சில்லறை விற்பனை போன்ற பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு உகந்த சூழலை வழங்கும் இந்தத் தரவு நிலையம், மின்னிலக்க உருமாற்ற முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லும்.
இது குறித்துப் பேசிய பல்கேரிய புத்தாக்க, வளர்ச்சித் துறை அமைச்சர் மிலேனா ஸ்டோய்சேவா, “சோஃபியாவில் புதிய நிலையத்தின் திறப்பு, எங்களது நாட்டில் திறனாளர்களை வளர்ப்பதில் இன்ஃபோசிஸ் கொண்டுள்ள கடப்பாட்டிற்குச் சான்றாகத் திகழ்கிறது,” என்றார்.