ராய்ப்பூர்: 90 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீஷ்கரில் முதல்கட்ட தேர்தல் செவ்வாய்க்கிழமையன்று நடைபெறுகிறது. இந்த தொகுதிகளில் ஆளும் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உள்பட 223 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பேர் பெண்கள் ஆவர்.
இதற்கான வாக்குப் பதிவு இந்திய நேரப்படி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. அதேநேரம் பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் நிறைந்த 10 தொகுதிகளில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்தலைப் புறக்கணிக்கும்படி நக்சலைட்டுகள் அழைப்பு விடுத்துள்ள நிலையில் அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஏறக்குறைய 60,000 பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆளில்லா வானூர்தி, ஹெலிகாப்டர்கள் மூலம் நக்சலைட்டுகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், வெடிகுண்டு நிபுணர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், சத்தீஷ்கரின் சுக்மா மாவட்டத்தில் தொண்டமர்கா பகுதியில் நக்சலைட்டுகள் வைத்த சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடித்ததில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் காயமடைந்து உள்ளார். அவர் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட எஸ்.பி. கிரண் சவான் கூறியுள்ளார்.