ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இம்மாதம் 25ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், 50 ஆண்டுகளாக தேர்தல்களில் போட்டியிடும் 78 வயது சுயேட்சை வேட்பாளர் தீதர் சிங் மீது கவனம் திரும்பியுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர் தீதர் சிங், 1970களிலிருந்து போட்டியிடுகிறார். பஞ்சாயத்துத் தேர்தல் முதல் மக்களவைத் தேர்தல் வரை அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டுள்ளார்.
போட்டியிடும் ஒவ்வொரு தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததுடன், வைப்புத்தொகையையும் இழந்துள்ளார். அதிகபட்சமாக 2008ல் ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் 938 வாக்குகள் பெற்றார். இருப்பினும், அவர் பின்வாங்கவில்லை. இந்த முறை கரன்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இதுவரை 20 தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகும் ஏன் போட்டியிடுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டதற்கு ‘ஏன் போட்டியிடக் கூடாது?’ என எதிர்கேள்வி எழுப்புகிறார் தீதர் சிங்.
தன்னைப் போன்ற நிலமற்ற மற்றும் ஏழைத் தொழிலாளிகளுக்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும் என்பதே அவரது கோரிக்கையாக உள்ளது.