பெங்களூரு: பெங்களூரில் திங்கட்கிழமை இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் கிருஷ்ணராஜபுரம், ஹென்னூர், கெங்கேரி, மாகடி உள்ளிட்ட இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
இந்தப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளத்தில் வெள்ளம் குளம் போல தேங்கியது. கம்மனஹள்ளி, சாந்தி நகர், மைசூர் வங்கி சதுக்கம், மல்லேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் சாலையோர மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
கனமழை காரணமாக பெங்களூரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெல்லாரி சாலை, மைசூரு சாலை ஆகியவற்றில் உள்ள சுரங்கப் பாதைகளில் வெள்ளம் தேங்கியதால் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ஆகியவை மூழ்கின. சாலைகளில் தேங்கிய வெள்ளத்தால் செவ்வாய்க்கிழமையன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் பெங்களூரு மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கனமழை கொட்டிய நள்ளிரவில் கர்நாடக துணை முதல்வரும் பெங்களூரு நகர வளர்ச்சித் துறை அமைச்சருமான டி.கே. சிவகுமார், மாநகராட்சித் தலைமை அலுவலகத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். வெள்ள பாதிப்பு, உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை, நிவாரணம் ஆகியவை குறித்து அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.