புதுடெல்லி/பெங்களூரு: கடந்த 3ஆம் தேதி நடந்த காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், நவம்பர் 23ஆம் தேதிவரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,600 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால், கர்நாடக துணை முதல்வரும் நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார், ‘‘கிருஷ்ணராஜசாகர் அணையில் போதிய நீர் இல்லை. தற்போது இருப்பில் உள்ள நீரைக் கொண்டே கர்நாடகாவின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. எனவே தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க இயலாது,” என்றார்.
இது குறித்து டி.கே.சிவகுமார் முதல்வர் சித்தராமையாவுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் புதுடெல்லிக்கு சென்ற அவர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து மூத்த வழக்கறிஞர்கள் ஃபாலி எஸ் நரிமன், பி.வி.ஆச்சார்யா உள்ளிட்ட சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறு பரிசீலனை மனு தாக்கல் செய்வது, அந்த வழக்கில் வாதிட வேண்டிய கருத்துகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி கோருவது தொடர்பான விவகாரத்தையும் உச்ச நீதிமன்றத்தில் நினைவூட்டல் மனு தாக்கல் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.