உத்தரகாசி: உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் இடிபாடிகளில் சிக்கியுள்ளனர்.
ஆகக் கடைசி நிலவரப்படி 40 பேரும் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்று மீட்புப் பணியாளர்கள் கூறியதாக சில தகவல்னள் தெரிவித்தன.
பல மணி நேரமாக உயிருக்குப் போராடி வரும் அவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய, மாநில அரசுகள் தெரிவித்துள்ளன.
தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்த நிலையில், அன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், இரு கிராமங்களை இணைக்கும் வகையில் புதிய சுரங்கப்பாதை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
ஞாயிற்றுக்கிழமையான நேற்று (நவம்பர் 12) அதிகாலை இச்சுரங்கப்பாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
மொத்தம் முப்பது மீட்டர் நீளமுள்ள பாதை திடீரென இடிந்து விழுந்ததாகவும் சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதியில் சுமார் 270 மீட்டர் தூரத்தில் விபத்து நிகழ்ந்ததாகவும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களில் ஒருவர் மட்டுமே உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றவர்கள் பீகார், மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் பிபிசி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தொழிலாளர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கி 24 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை யாரும் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் இல்லை.
முதற்கட்டமாக விபத்துப் பகுதிக்கு அருகே உள்ள இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாக உத்தராகண்ட் காவல்துறை தெரிவித்துள்ளது.
சுரங்கப்பாதைக்கான முகப்புப் பகுதிக்கான கட்டுமானப் பணியின்போதுதான் விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறியதாக பிபிசி தமிழ் ஊடகம் தெரிவிக்கிறது.
தற்போது வரை சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
விபத்தையடுத்து சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளவர்களுக்கு உயிர்வாயு தடைபட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ள நிலையில், அனைவருக்கும் குழாய் மூலம் உயிர்வாயுவும் குடிநீரும் விநியோகிக்கப்படுவதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நவீன துளையிடும் இயந்திரங்கள் மூலம் பெரிய துளை ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவர் என்றும் அதிகாரிகள் கூறியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் விவரங்களைக் கேட்டறிந்தார்.
இது தொடர்பாக அதிகாரிகளுடன் தாம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாக முதல்வர் தாமி தெரிவித்துள்ளார்.