ஜெய்ப்பூர்: இந்தியாவில் ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களில் மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் வாக்குப்பதிவு முடிந்து விட்டது.
40 தொகுதிகளை கொண்ட மிசோரமில் கடந்த 7ஆம் தேதியும், 230 இடங்களை கொண்ட மத்திய பிரதேசத்தில் கடந்த 17ஆம் தேதியும் ஓட்டுப்பதிவு நடந்தது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் 7,17ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்றது.
200 இடங்களை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்துக்கு சனிக்கிழமை (25ஆம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான அனல் பறந்த பிரசாரம் வியாழக்கிழமை மாலையுடன் நடந்து முடிந்தது.
ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தில் உள்ளது. பாஜக ஆட்சியை கைப்பற்றும் வேட்கையில் இருக்கிறது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இதையொட்டி காங்கிரஸ், பாஜக தலைவர்கள் ராஜஸ்தான் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி பில்வாரா, துர்காபூரில் தேர்தல் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது அவர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தியும் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டார். தோல்பூர், பரக்பூர் மாவட்டங்களில் அவர் பிரசாரம் செய்தார்.
முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. களத்திலும் வசுந்தர ராஜே குறித்த பேச்சுதான் அதிகம் அடிபடுகிறது.
இம்மாநிலத்தில் இதுவரை எந்த ஒரு கட்சியும் இரண்டு முறை தொடர்ச்சியாக ஆட்சி அமைத்தது கிடையாது. அதனால் பாஜக நம்பிக்கையுடன் உள்ளதாக அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.