அமராவதி: கடந்த 2004 முதல் 2009ஆம் ஆண்டு வரையில் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தார். அக்காலக் கட்டத்தில், இப்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாகப் புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 2012ஆம் ஆண்டு மே மாதம் ஜெகன்மோகனை சிபிஐ கைது செய்தது. 15 மாதச் சிறைவாசத்திற்குப் பின் 2013ஆம் ஆண்டில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
பின்னர் 2019ஆம் ஆண்டில் பதவியேற்ற பின், சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னிலையாவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜெகனுக்கு அளிக்கப்பட்டுள்ள பிணையை ரத்து செய்யக் கோரி அவரது கட்சியை சேர்ந்த அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரகுராம கிருஷ்ணா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவரது மனு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, எம்.பி. ரகுராம கிருஷ்ணா தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “கடந்த பத்து ஆண்டுகளாக சொத்துக் குவிப்பு வழக்கில் பிணை பெற்று, தற்போது ஆந்திர மாநில முதல்வராக ஜெகன்மோகன் பதவி வகித்து வருகிறார்.
முதலமைச்சர் பொறுப்பு வகிப்பதால் அவர் சாட்சிகளை மிரட்டி, அவரது வழக்கில் சாட்சிகளே இல்லாமல் செய்து விடுவார்.
எனவே, அவரது பிணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் விசாரணையில் இருந்து ஒவ்வொரு முறையும் விலக்கு அளிப்பதற்கு முறையான காரணம் இருக்க வேண்டும். இல்லையெனில் பிணை வழங்கக்கூடாது,” என்றார்.
ஜெகன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை ஹைதராபாத்தில் இருந்து டெல்லிக்கு மாற்ற வேண்டும் எனவும் மனுதாரர் தனி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து இந்த மனுக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் மற்றும் சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கை வரும் ஜனவரி முதல் வாரத்தில் விசாரிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது.