விஜயவாடா: ஆந்திராவில் திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, உடல்நிலை காரணங்களுக்காக நான்கு வார காலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் 2014 முதல் 2019 வரையிலான முதல்வராக பதவிவகித்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுக் கழகத்தில் சீமென்ஸ் நிறுவனம் மூலம் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க சீமென்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது.
இதில் ரூ.118 கோடி ஊழல் நடந்து அதில் சந்திரபாபு நாயுடுவுக்கு தொடர்பு இருப்பதாகவும் கடந்த 2021ஆம் ஆண்டில் இப்போதைய ஜெகன் மோகன் அரசு குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக சிஐடி காவல்துறை 2021ஆம் ஆண்டே வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக சிஐடி காவல்துறையினர் சந்திரபாபு நாயுடுவை கடந்த மாதம் 9ஆம் தேதி கைது செய்து விஜயவாடா லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தினர்.. இதனை தொடர்ந்து சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சந்திர பாபு நாயுடு தரப்பில் பிணை கோரிய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதையடுத்து உடல்நிலை மற்றும் மருத்துவக் காரணங்களுக்காக அவரை சிறையில் இருந்து பிணையில் விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்திருந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் நான்கு வார காலம் இடைக்கால விடுவிப்பை அறிவித்துள்ளது.