ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் அரசு, முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநிலத்தில் 200 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சனிக்கிழமை தேர்தல் நடந்தது. காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை விறுவிறுப்பாக நடந்தது.
வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடக்க, மாநிலம் முழுவதும் தேர்தல் ஆணையமும் மாநில அரசும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தன. அதையடுத்து தேர்தலின்போது பெரிய அளவில் எவ்வித வன்முறையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.
199 தொகுதிகளுக்கு சனிக்கிழமை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இங்கு காங்கிரஸ் - பாஜக கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்த கட்சிகளுடன் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி ஆகியவையும் போட்டியிட்டுள்ளன.
இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்குத் தேவை 101 தொகுதிகள்.
2018 தேர்தலில் காங்கிரஸ் 100 தொகுதிகளிலும், பாஜக 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
2013 தேர்தலில் காங்கிரஸ் வெறும் 21 தொகுதிகளிலும் பாஜக 163 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.