சென்னை: மழை வெள்ளத்தால் மக்கள் வீடுகளில் முடங்கி இருந்த நிலையில் பாதுகாப்பு கருதி மின்சார விநியோகம் நிறுத்தப்பட்டது. இதனால் 2 நாள்களாக இருளில் மக்கள் மூழ்கினார்கள்.
இந்த நிலையில் நேற்று இணையத் தளச் சேவையும் முடங்கியது. அனைத்து தனியார் நிறுவனங்களின் கைப்பேசி இணைப்புகளும் செயல்படவில்லை. கைப்பேசிச் சேவை செயல் இழந்ததால் தகவல் பரிமாற்றம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மழை பாதிப்பு, நிலவரம் குறித்த தகவல்களை சமூக ஊடகங்கள் வழியாகப் பார்த்து தெரிந்து கொண்ட மக்கள் அவை செயல் இழந்ததால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் சிரமத்திற்கு ஆளானார்கள்.
ஏற்கெனவே மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சியும் கேபிள் தொலைக்காட்சியும் செயல்படவில்லை. இந்த நிலையில் இணையம், வாட்ஸ்அப் சேவை உள்ளிட்ட அனைத்து தகவல் தொடர்புச் சாதனங்களும் சென்னையில் முடங்கியதால் மக்கள் பெரும் தவிப்புக்கு உள்ளானார்கள்.
கைப்பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டதால் யாரிடமும் திங்கட்கிழமை முதல் பேச முடியவில்லை. செவ்வாய்க்கிழமையும் அதே நிலை நீடிக்கிறது.
இதனால் சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உறவினர்கள், நண்பர்களைத் தொடர்புகொள்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டது.
வீடுகளில் இருளில் முடங்கிய மக்களுக்கு தகவல் பரிமாற்றம் பேருதவியாக இருந்தது. ஆனால் அவை செவ்வாய்க்கிழமை 2வது நாளாக முடங்கியதால் யாரையும் எளிதில் தொடர்புகொள்ள முடியவில்லை.
ஒரு சில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மோட்டார் பம்ப் செட், மிக்சி, கைப்பேசி மின்னூட்டி செய்வது போன்றவை பயன்பாட்டிற்கு வந்தது.