சென்னை: மிச்சாங் புயல் தாக்கத்தால் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை குறைந்தது 12 பேர் பல்வேறு காரணங்களால் உயிரிழந்தனர்.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மட்டும் கடந்த 45 மணி நேரத்தில் 47 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
பல வீடுகளில் வெள்ளநீர் சூழ்ந்து நிற்கிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ள நிலையில், குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான விமானங்கள் மட்டுமே இயங்கின. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 89 விமானங்கள், அதேபோல் சென்னைக்கு வரவேண்டிய 88 விமானங்கள் என மொத்தம் 177 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் வெள்ளம் சூழ்ந்தது. இதை அடுத்து திங்கட்கிழமை காலையிலிருந்து, விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
திங்கட்கிழமை இரவு 11 மணியிலிருந்து சென்னை விமான நிலையம் மீண்டும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம், புயல் ஆபத்து இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்று கூறியதும் அந்த முடிவு கைவிடப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதால் ஏராளமான பயணிகள் விமான நிலையத்தில் குவிந்தனர்.
சென்னை விமான நிலையம் செவ்வாய்க்கிழமை காலையிலிருந்து செயல்படத் தொடங்கியவுடன் மும்பையிலிருந்து வந்த விஸ்தாரா விமானச் சேவை காலையில் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர் முற்பகல் 11.46 மணிக்கு இண்டிகோ விமானச் சேவை சென்னையிலிருந்து சண்டிகருக்குப் புறப்பட்டது.
மிச்சாங் புயலால் சென்னையில் உள்ள சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களிலிருந்து புறப்பட வேண்டிய 100க்கு மேற்பட்ட ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டன.