பாட்னா: ‘இண்டியா’ கூட்டணிக் கட்சியினர் இடையே முறையான தகவல் தொடர்பில்லை என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் குமார் பிண்டூ கூறியுள்ளார்.
யாருடைய பலத்தில் மாநிலங்களில் போட்டியிடுகிறதோ அவர்களையே காங்கிரஸ் புறக்கணித்து விடுகிறது.
பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பலத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனின் கட்சி ஆகியவற்றின் பலத்தில் போட்டியிடுகிறது. அவை அனைத்தையும் காங்கிரஸ் கட்சி புறக்கணிக்கிறது.
இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டால் மட்டுமே 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெல்வதற்கு வாய்ப்பு இருக்கும்.
இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே மிகப்பெரிய தகவல் தொடர்பு இடைவெளி உள்ளது. பெரிய தலைவர்களின் கருத்துகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இது சரிசெய்யப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
பீகார் முதல்வரும், ஜேடியு தலைவருமான நிதிஷ் குமார் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டுவரும் வேலையைச் செய்தார். ஆனால், அதன்பிறகு காங்கிரஸ் மேலாதிக்கத்துடன் செயல்பட்டது. வட்டாரத் தலைவர்களை புறக்கணித்ததன் விளைவாகவே காங்கிரஸ் சட்டமன்றத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளது என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் புதன்கிழமை (6.12.2023) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இண்டியா கூட்டணிக் கூட்டத்தில் பல்வேறு கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க முடியாததால் கூட்டத்தை டிசம்பர் மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.