புதுடெல்லி: இந்தியாவின் எதிர்க்கட்சிகள், நாடாளுமன்றத்தில் இருந்து 143 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை கண்டனம் தெரிவித்து ஊர்வலமாகச் சென்றனர்.
‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகையை எதிர்க்கட்சியினர் ஏந்திச் சென்றனர்.
இம்மாதம் 13ஆம் தேதி 2 பேர், பார்வையாளர் மாடத்தில் இருந்து குதித்து வண்ணப் புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் முதல், மக்களவையில் இருந்து 97 எம்.பி.கள், மாநிலங்களவையில் இருந்து 46 எம்.பி.கள் என 143 பேர் மொத்தமாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து மத்திய டெல்லியில் உள்ள விஜய் சவுக் வரை ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள்’ என்ற பதாகை ஏந்தி ஊர்வலமாக சென்றனர் என்று இந்து தமிழ் திசை தகவல் தெரிவித்தது.
இந்த ஊர்வலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “நாங்கள் நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து கேள்வி எழுப்ப விரும்புகிறோம். பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சரும் பாதுகாப்பு அத்துமீறல் குறித்து மக்களவை,மாநிலங்களவையில் பேசவில்லை. இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறிய செயல்” என்று தெரிவித்தார்.
எம்பிகளின் இடைநீக்கத்தை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஜந்தர்மந்தரிலும், நாடுதழுவிய அளவிலும் போராட்டம் நடத்த இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே மோதலை ஏற்படுத்தியுள்ள மக்களவை அத்துமீறல் விவாகரத்தில் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரைப் போல திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. நடித்துக்காட்டிய விவகாரமும் தற்போது வெடித்துள்ளது.
இதுகுறித்து திரிணாமூல் எம்.பி. கல்யாண் பானர்ஜி மன்னிப்பு கேட்ட பிறகும் இது குடியரசுத் துணைத் தலைவரை அவமதிக்கும் செயல் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சி, ஒட்டுமொத்த மோடி சூழல் தற்போது பானர்ஜி விவகாரத்தை தூக்கிப்பிடிக்க தொடங்கியுள்ளன. ஆனால் அத்துமீறலில் ஈடுபட்டவர்களை உள்ளே வர பாஸ் வழங்கிய பிரதாப் சிம்ஹா இன்னும் நாடாளுமன்றத்தில் எம்பியாக இருக்கிறார். அவர் இன்னும் விசாரிக்கப்படவில்லை என்று கூறியது.