புதுடெல்லி: எட்டு ஆண்டுகளுக்குமுன் மாயமாக மறைந்த இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமானத்தின் சிதைந்த பாகங்கள், தற்போது வங்கக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத் தலைநகர் சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இருந்து அந்தமானுக்கு கடந்த 22-7-2016ல் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் புறப்பட்டுச் சென்றது.
இதில், விமான ஊழியர்கள் ஆறு பேர், விமானப்படை வீரர்கள் 11 பேர், ஆயுதக்கிடங்கில் பணிபுரிந்த ஆந்திராவைச் சேர்ந்த எட்டு பேர் உள்ளிட்ட 29 பேர் பயணம் செய்தனர்.
புறப்பட்ட 16 நிமிடங்களுக்குப்பின் வங்கக்கடல் பகுதியில் விமானம் பறந்தபோது, அதன் தொடர்பு ரேடார் கண்காணிப்பில் இருந்து துண்டிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, விமானங்கள், கப்பல்கள் மூலம் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் வழி யாரையும் கண்டுபிடிக்க முடியாததால், விமானத்தில் பயணம் செய்த 29 பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இப்போது கடலில் விழுந்து நொறுங்கிய விமானத்தின் பாகங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கடற்கரையில் இருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
சென்னையில் இயங்கி வரும் தேசிய கடல்சார் தொழில் நுட்ப நிறுவனம் ஆழ்கடல் பகுதியில் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் மாயமான விமானத்தின் பாகங்கள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
“அதைப் படம்பிடித்து புவி அறிவியல் அமைச்சுக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து விமானப்படைக்கு அந்தப் படங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதன்பிறகே அது மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது,” என்கிறார் அந்நிறுவனத்தின் இயக்குநர் ராமதாஸ்.
அந்த விமானப் பாகங்கள் சென்னை கடற்கரையில் இருந்து ஏறத்தாழ 140 கடல் மைல் தொலைவில், கடலுக்கு அடியில் சுமார் 11,200 அடி ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.