புதுடெல்லி: அயோத்தியில் இருந்து டெல்லிக்கு சனிக்கிழமை (ஏப்ரல் 13) புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று, சண்டிகருக்கு மாற்றிவிடப்பட்டதைத் தொடர்ந்து, எரிபொருள் எஞ்சியிராத நிலையில் தரையிறங்கியதாக பயணி ஒருவர் கூறியுள்ளார்.
அச்சம்பவம் பாதுகாப்பு தொடர்பில் கவலையை ஏற்படுத்தியுள்ளது, இண்டிகோ தரநிலை செயலாக்க நடைமுறையை மீறியிருக்கலாம் என்று பயணிகளும் ஓய்வுபெற்ற விமானி ஒருவரும் கூறினர்.
சமூக ஊடகத்தில் தனது “துன்பகரமான அனுபவத்தை” பகிர்ந்த துணைக் காவல்துறை ஆணையர் (குற்றம்) சதீஷ் குமார், விமானம் (6e2702) அயோத்தியில் இருந்து பிற்பகல் 3.25 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.30 மணிக்கு டெல்லி சென்றடைய இருந்ததாகக் கூறினார்.
இருப்பினும், தரையிறங்குவதற்கு சுமார் 15 நிமிடங்களுக்கு முன்பு, டெல்லியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக விமானத்தை அங்கு தரையிறக்குவது சிரமமாக இருக்கும் என்று விமானி அறிவித்தார்.
விமானம் அந்நகர் மீது பறந்து, இரண்டு முறை தரையிறங்க முயன்றது. ஆனால் இரண்டு முயற்சிகளும் வெற்றி பெறவில்லை என்று விமானி கூறினார்.
விமானத்தில் 45 நிமிடங்களுக்கு எரிபொருள் இருந்ததாக மாலை 4.15 மணிக்கு விமானி பயணிகளிடம் தெரிவித்ததாக குமார் சொன்னார். இருப்பினும், விமானத்தைத் தரையிறக்குவதில் இருமுறை முயற்சி தோல்வியுற்றதைத் தொடர்ந்து, எரிபொருள் இருப்பு குறித்த அறிவிப்பு வெளியான 75 நிமிடங்களுக்குப் பிறகு, மாலை 5.30 மணிக்கு, விமானம் சண்டிகருக்கு மாற்றிவிடப்படும் என்று விமானி அறிவித்தார்.
“45 நிமிடங்களுக்கு எரிபொருள் இருப்பது குறித்த அறிவிப்பு வெளியான 115 நிமிடங்களுக்குப் பிறகு, விமானம் இறுதியாக சண்டிகர் விமான நிலையத்தில் மாலை 6.10 மணிக்கு தரையிறங்கியது.
“நாங்கள் சரியான நேரத்தில் தரையிறங்கியதைப் பின்னர் அறிந்தோம். ஓரிரு நிமிடங்களுக்கு மட்டுமே எரிபொருள் எஞ்சியது,” என்று குமார் கூறினார்.