திருப்பதி: ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் சேர்ந்தவர் கங்க ராஜூ. இவரது மகள் அவந்தி (7).
அவந்தி அவுலதிபயாவில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். திங்கட்கிழமை (ஏப்ரல் 15) மாலை பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்த அவந்தி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக 2 சுவர்களுக்கு இடையில் சென்ற அவர் அதில் சிக்கிக் கொண்டார். முன்னோக்கியும் பின்னோக்கியும் நகர முடியாமல் அவதி அடைந்து கத்தி கூச்சலிட்டார்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வந்தனர். ஆனால் அவர்களால் சிறுமியை மீட்க முடியவில்லை. அதன் பின்னர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியை மீட்பதற்காக பல்வேறு முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர். ஆனால் அவர்களது முயற்சி தோல்வியில் முடிந்தது.
அதையடுத்து சுவரை இடித்து சிறுமியை மீட்க அதிகாரிகள் முடிவெடுத்தனர். கிட்டத்தட்ட 2 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு சிறுமி காயம் இல்லாமல் மீட்கப்பட்டார்.
துடிப்புடன் செயல்பட்ட அதிகாரிகளுக்கு கிராமத்து மக்கள் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான காணொளியும் படங்களும் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பரவி வருகின்றன.