திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1,373 பேர் டெங்கி காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
அவர்களில் 294 பேருக்கு டெங்கி பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மேலும் டெங்கி பாதிப்பு காரணமாக 6 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் காய்ச்சல் பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில சுகாதாரத்துறை எடுத்து வருகிறது.
கேரளாவில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் கொசுக்களால் பரவும் டெங்கி, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்பு உள்ளது. அதனால், கொசு இனப்பெருக்கத்தைத் தடுக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் வருகிற பருவமழை காலத்தில் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒட்டுமொத்த மழைப்பொழிவு 106 விழுக்காடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.