ஆலப்புழா: கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் இரண்டு இடங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எடத்வா கிராமப் பஞ்சாயத்துப் பகுதி 1, செருதான கிராமப் பஞ்சாயத்துப் பகுதி 3 ஆகியவற்றில் உள்ள இடங்களில் வளர்க்கப்படும் வாத்துகளுக்குப் பறவைக் காய்ச்சல் இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இந்த வாத்துகளின் மாதிரிகள் போபாலில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்ட பின்னர் பறவைக் காய்ச்சல் (எச்5என்1) நோய் உறுதிசெய்யப்பட்டது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவில், வாத்துகளைக் கொன்று அழிக்கும் பணியைத் தொடங்க, மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. விரைவு அதிரடிப்படை உருவாக்கப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகளை விலங்குகள் நலத்துறை விரைவில் நிறைவுசெய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நோய் மனிதர்களுக்குப் பரவ வாய்ப்பில்லை என்பதால் தேவையில்லாமல் அச்சம் அடைய வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இந்தப் பகுதியில் பறவைக் காய்ச்சல் பரவிவருவதைத் தொடர்ந்து, இந்த அழித்தல் செயல்முறைக்கான நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன.