புதுடெல்லி: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா நடைபெற்று வருகிறது. இங்கிருந்து எதிர்காலத்துக்கான புதிய பயணம் தொடரும் என்று நாடு நம்புவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
யோகா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்தியப் பாரம்பரியத்தையும் தனது அரசாங்கம் ஊக்குவித்ததாக மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தபால்தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டுப் பேசினார்.
“உலக நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடிய சக்தியாக இந்தியா இருக்கிறது. இந்தியாவின் பண்பாட்டுப் பிம்பம் பெரிய பங்களிப்பைக் கொண்டுள்ளது.
“உலகின் பழமையான நாகரிகத்துக்கு மட்டுமன்றி மனிதகுலத்துக்குப் பாதுகாப்பான புகலிடமாகவும் உள்ளது,” என்றார் மோடி.
இதனிடையே, பெங்களூருவில் நடந்த பாஜக கூட்டத்தில் பேசிய மோடி, “நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்ல விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சி முதலீட்டுக்கு எதிரானது, தொழில்முனைவோருக்கு எதிரானது, தனியார் துறைக்கு எதிரானது, வரி செலுத்துபவர்களுக்கு எதிரானது, செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு எதிரானது,” என்றார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வளர்க்கும் சிந்தனைகளும் சித்தாந்தமும் மிகவும் ஆபத்தானவை. பெண்கள் தாக்கப்படுகிறார்கள். சந்தைகளில் குண்டுகளை வெடிக்கிறார்கள். மதப் பாடல்களைக் கேட்டதற்காக மக்கள் தாக்கப்படுகிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் பொதுவானவை அல்ல,” என்று கடுமையாகச் சாடினார்.
மோடியின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “மக்களுக்காக 24x7 மணி நேரமும் உழைக்கிறேன் என்று கூறுகிறார் பிரதமர் மோடி. ஆனால் கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியின்போது பிரதமர் மோடி எங்கே இருந்தார்? அப்படியானால், இந்த ‘24x7’ படத்தின் உண்மைக் கதைதான் என்ன? எல்லாமே விளம்பரம்தான் என்று தெரிகிறது,” என்றார்.
“பிரதமர் மோடி உண்மையிலேயே விவசாயிகளின் நலனை விரும்புகிறாரா என்பதை தனது மனசாட்சியிடமே அவர் கேட்டுக்கொள்ள வேண்டும். டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் இறந்தனர். விவசாயிகளைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு தார்மீக உரிமை இல்லை.
“பாஜக ஆரம்பத்திலிருந்தே விவசாயிகளுக்கு எதிரானது. முதலாளிகள், தொழிலதிபர்கள், வியாபாரிகளின் கட்சி பாஜக,” என்று சித்தராமையா விமர்சித்துள்ளார்.