புதுடெல்லி: உலகில் வேகமாக முன்னேறி வரும் பொருளியலைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியாவில் 50 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.416,252 கோடி) முதலீடு செய்வது தொடர்பில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் (யுஏஇ) பரிசீலித்து வருகின்றன.
இதுதொடர்பான முதற்கட்ட அறிவிப்புகள் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் வெளியாகலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாக புளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.
யுஏஇயின் ஆகப் பெரிய இரண்டாவது வணிகப் பங்காளியாக இந்தியா திகழ்கிறது.
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக, இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அவை, எண்ணெய் சாராத இருதரப்பு வணிகத்தின் மதிப்பை 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.
முன்னதாக, இவ்வாண்டு ஜூலை மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, யுஏஇ அதிபர் ஷேக் முகம்மது பின் ஜாயதைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அந்த மத்தியக் கிழக்கு நாட்டிற்கு மோடி மேற்கொண்ட ஐந்தாவது பயணம் அது.
முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், அரசாங்கச் சொத்துகளில் பங்கெடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன என்றும் அடுத்த ஆண்டுத் தொடக்கத்தில் அதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
பெரிய அளவிலான முதலீடுகள், அவை தொடர்பான அறிவிப்புகள் குறித்த இறுதி முடிவுகள் இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
மேலும், இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து யுஏஇ அதிபரின் சகோதரர் ஷேக் தனூன் பின் ஜாயதின் மேற்பார்வையில் செயல்படும் நிறுவனங்கள் முதற்கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.