கொச்சி: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்தபோது தன்னிடம் முறையின்றி நடந்துகொண்டதாக சக பயணிமீது கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளம் நடிகை ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை மும்பையிலிருந்து கொச்சி நகருக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இந்த அத்துமீறல் இடம்பெற்றதாக அந்நடிகை தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நெடும்பசேரி காவல்துறை வழக்கு பதிந்து, விசாரணையைத் தொடங்கியுள்ளது.
போதையில் இருந்த அந்த ஆடவர், தன்னிடம் வரம்புமீறி நடந்துகொண்டதோடு, தகாத இடங்களில் தொட்டதாகவும் அந்நடிகை குற்றஞ்சாட்டினார்.
அதுபற்றி விமான ஊழியரிடம் தாம் தெரிவித்ததாகவும் அதன்பின் தான் வேறு இருக்கையில் அமர வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
விமானம் கொச்சியில் தரையிறங்கியபின் தான் எதிர்கொண்ட தொல்லை குறித்து ஏர் இந்தியா அலுவலகத்திலும் அங்கிருந்த காவல்துறை உதவி மையத்திலும் புகார் செய்தார். பின்னர், நெடும்பசேரி காவல் நிலையத்திலும் முறையாகப் புகாரளித்தார்.
இந்நிலையில், அவருக்குத் தொல்லை தந்தவர் கேரளத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.