அவாண்ட் நாடகக் குழு நடத்திய ‘இதுவா? அதுவா?’ கலந்துரையாடல் ஞாயிறு செப்டம்பர் 10 மாலை வேளையில் சுவாரசியமாக நடந்தது.
இக்கலந்துரையாடலுக்கு இரு முக்கிய நோக்கங்கள் இருந்தன - இளையர்களைத் தமிழில் இயல்பாகப் பேச ஊக்குவிப்பதும், அவர்களைப் பொறுத்தவரை, பாரம்பரிய உடைகளில் எது அழகு என்று அறிவதும்.
“சேலை, வேட்டி கட்டுவதில் எது (அவரவருக்கு) அழகு? இதுவா? அதுவா?” என்ற தலைப்பில் கலந்துரையாடல் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தலைவர் கிஷோர்குமரன் கேள்விக் கணைகளைத் தொடுக்க, கலந்துகொண்ட 13 பேச்சாளர்களும் வண்ண வண்ணப் பாரம்பரிய உடையுடுத்தி வந்து தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தினர்.
சிறப்பு அம்சமாக உயர்நிலை, மேல்நிலை மாணவர்கள் முதல் வேலை பார்க்கும் இளையர்கள்வரை பேச்சாளர்களாக இடம்பெற்றனர்.
ஆண்களின் கம்பீரத்தை வெளிப்படுத்துவது வேட்டி, பெண்களின் அழகிற்கு மெருகூட்டுவது சேலை என்று அவர்கள் கூறினர்.
“புடவை கட்டுவதில் உள்ளது தனி உணர்ச்சி. எத்தகைய உடல்வாகும் இருப்பவர்கள் கட்டக்கூடிய ஆடையாக சேலை திகழ்கிறது,” என்றார் பிரியங்கா, 31.
‘நீங்கள் பாரம்பரிய ஆடை அணிந்து சென்ற நிகழ்ச்சியில் அனைவரும் மேற்கத்திய பாணியில் உடை அணிந்து வந்தால் வெட்கப்படுவீர்களா?’ என்ற கேள்விக்கும் கருத்து தெரிவித்தனர் பேச்சாளர்கள்.
அதேபோன்று, தாம் பாரம்பரிய ஆடை அணியாதபோதிலும், மற்றோர் இனத்தவர் தம் பாரம்பரிய உடைகளை உடுத்திவந்த சம்பவங்களையும் அவர்கள் நினைவுகூர்ந்தனர்.
‘நாம் தெய்வீகமாகக் கருதும் பாரம்பரிய உடைகளிலும் ஆபாசம் இருக்கிறதா?’ என்ற கேள்வியும் எழுந்தது. உடையில் நாம் நாமாக இருக்கிறோமா என்பதே அதிமுக்கியம் என்ற கருத்து முன்னின்றது.
பாரம்பரிய ஆடைகளை எந்த பாணியில் பிறர் அணிந்தால் தமக்குப் பிடிக்கும் என்றும் பகிர்ந்துகொண்டனர் பேச்சாளர்கள்.
சமூக ஊடகங்களில் ‘லைக்ஸ்’ வருவதற்காக பாரம்பரிய உடைகள் அணிகிறோமா, பிறர் ஏதேனும் நினைப்பார்களோ என ஒருமுறைக்கு மேல் அதே உடைகளை உடுத்தாமல் புதிய புதிய புடவைகளைச் சேகரிக்கிறோமா, என தங்களது அன்றாட வழக்கங்களை நகைச்சுவையோடு சுட்டினர்.
“மாறிவரும் காலங்களுக்கேற்ப மாறுவது அவசியமே. அவ்வாறு பாரம்பரிய உடைகளை அணியும் பாணிகளும் தொடர்ந்து மாறும். ஆனால், பாரம்பரியத்தின் முக்கியத்துவம் மட்டும் என்றும் மாறாது,” என்ற நம்பிக்கையான வரிகளோடு நிகழ்ச்சியை முடித்துவைத்தார் திரு கிஷோர்குமரன்.
“மிகச் சிறப்பானதோர் அனுபவமாக இருந்தது. நம் தமிழ்ப் பாரம்பரிய ஆடைகளைப் பற்றி கலந்துரையாட எனக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது,” என்றார் பங்கெடுத்த நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர் கிஷன், 18.
வேட்டி கட்டவே தெரியாதவர்க்கு வேட்டியை ஒரு நிமிடத்திற்குள் கட்ட உதவி அசத்தினார் கிஷன்.
“பார்வையாளர்களையும் சூடான கலந்துரையாடல்களில் ஈடுபடுத்தியது சுவாரசியமாக இருந்தது.”
“இப்பட்டிமன்றத்தைக் கண்ட பலருக்கும் நம் கலாசாரத்தைக் கட்டிக்காக்க உந்துதல் ஏற்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்,” என்றார் பேச்சாளர் விஷ்ணு வர்தன் சங்கரன்.
அவாண்ட் நாடகக் குழுவின் மற்றொரு நாடகமான ‘ஹேங்மென்’ அண்மையில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அரங்கேறியது. வித்தியாசமான முறையில், நாடகம் நடைபெறும்போதே கதாபாத்திரங்களை மாற்றும் வாய்ப்பைப் பார்வையாளர்களின் கைகளில் ஒப்படைத்த இந்நாடகம், மக்களை மரண தண்டனையைப் பற்றிச் சிந்திக்க வைத்தது.