பட்டுப் பாவாடை, பூ, நகை, அலங்காரங்கள் என வண்ணங்களும் அழகியலும் நிறைந்த பண்டிகை தீபாவளி. அதன் மகத்துவத்தையும், கொண்டாடும் முறைகளையும் அனைத்து இன குழந்தைகளும் அறியும் நோக்கில் ‘பீகாக்ஸ் அரவுண்ட் லிட்டில் இந்தியா’ எனும் ஒரு விளக்கப் புத்தகம் உருவாகியுள்ளது மிக்க மகிழ்ச்சி என்கிறார் ஓவியக் கலைஞர் மிதுலா பழனிவேல்.
தமிழர் கலாசாரத்தையும் பண்பாட்டுச் சிறப்பையும் சிறு குழந்தைகளுக்கு எடுத்துச் செல்லும் முயற்சியாக இந்த வண்ணப்படங்கள் கொண்ட கதைப் புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார் எழுத்தாளர் வெலேரி பெரேரா.
இதன் விளக்கப் படங்களை வரைந்துள்ள மிதுலா பழனிவேல், 24, கூறுகையில், “சிங்கப்பூர் பல்லின கலாசாரம் கொண்ட ஒரு சமூகம். ஒவ்வொரு பண்டிகையும் தனி சிறப்பம்சங்களைக் கொண்டது. அதனை மிகக்கவனமாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் எழுத்தாளர் பெரேரா,” என்றார்.
ஒரு சிறுமியின் தீபாவளி நாள் போக்கை சித்திரிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ள இக்கதை, கோலமிடுவது, விளக்கேற்றுவது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, பெரியவர்களைச் சந்தித்து காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவது, முறுக்கு உள்ளிட்ட இந்திய பாரம்பரிய பலகார வகைகள், வழிபாடுகள், உடையலங்காரங்கள் என நுட்பமான கலாசாரக் கூறுகளைக் குழந்தைகளுக்கு படங்கள் மூலம் விளக்குகிறது.
தீபாவளி உலகெங்கிலும் பல்வேறு மொழியினரும் கொண்டாடும் பண்டிகை என்றாலும், இந்தப் புத்தகம் சிங்கப்பூரில் வாழும் இந்திய குடும்பங்கள், குறிப்பாக தமிழ்க் குடும்பங்களின் கொண்டாட்ட முறைகள், வீவக வீடுகளில் செய்யப்படும் அலங்காரங்கள், லிட்டில் இந்தியா ஒளியூட்டு விழா என உள்ளூர் குழந்தைகள் காணும் காட்சிகளைப் படங்களாகக் கொண்டுள்ளது இதன் சிறப்பம்சம் என்கிறார் முழுநேர புத்தக வரைக்கலைஞரான இவர்.
தனது ஐந்தாவது குழந்தைகள் படைப்பான இந்தப் புத்தகத்தை கருத்தாக்கம் முதல் இறுதி வரை முடிக்க ஏறத்தாழ மூன்று முதல் நான்கு மாதங்கள் ஆனதாகச் சொல்கிறார்.
கண்ணைப்பறிக்கும் வண்ணப் படங்களைத் தவிர, ஒவ்வொரு பக்கத்திலும் மறைந்திருக்கும் மயிலைக் கண்டு பிடிப்பது உள்ளிட்ட படிப்பதற்கு சுவாரசியம் கூட்டும் முயற்சியும் எடுத்திருப்பதாகச் சொல்கிறார்.
இந்தப் புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்திய மரபுடைமை நிலையத்தில் குழந்தைகளுக்கான சிறு நிகழ்வும் நடத்தப்பட்டது.
கிறிஸ்துமஸ், சீனப் புத்தாண்டுப் புத்தகங்கள் வரிசையில் தற்பொழுது இந்த தீபாவளிப் புத்தகம் வெளிவந்துள்ளது. தொடர்ந்து நோன்புப் பெருநாள் விளக்கப் புத்தகம் தயாராகி வருகிறது.