வீட்டிலிருந்து 6,000 கிலோமீட்டர் தொலைவிலிருந்தாலும் இந்திய வெளிநாட்டு ஊழியர் சின்னையா அழகிற்கு தீபாவளியை வீட்டிலேயே கொண்டாடும் உணர்வு.
அவரைப்போல் தானா மேரா கடற்கரைச் சாலையின் சாங்கி தங்குவிடுதி இரண்டில் வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு இரவு உணவு வழங்கியதோடு, விளையாட்டுகள், ஆடல் பாடல் கொண்டாட்டங்களும் தீபாவளியன்று நடத்தப்பட்டன.
“இவையெல்லாம் என் வீட்டையும் மனைவியையும் நினைவுபடுத்தின. குறிப்பாக, விளக்குகளுக்கு வண்ணம் பூசுவது எனக்கு மிகவும் பிடித்திருந்தது; வீட்டிலும் அதைத்தான் செய்வோம்,” என்றார் திரு சின்னையா.
இக்கொண்டாட்டங்களுக்கு மனிதவள அமைச்சின் உத்தரவாதம், பராமரிப்பு, ஈடுபாட்டுக் (ஏஸ்) குழு, ‘எஸ்-11’, ரட்சணிய சேனை, ‘லவ் அண்ட் கம்ஃபர்ட்’, ‘பிக் அட் ஹார்ட்’ போன்ற பங்காளிகள், தொண்டூழியர்களுடன் இணைந்து ஏற்பாடு செய்தது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மனிதவள மூத்த துணை அமைச்சர் டாக்டர் கோ போ கூன் கலந்துகொண்டார்.
இந்திய முஸ்லிம் சமூக சேவை சங்கம் 1,000 பேருக்குத் தயாரித்திருந்த உணவுவகைகளை ஊழியர்களுக்கு வழங்கி, அவர் கொண்டாட்டங்களைத் தொடங்கிவைத்தார்.
தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியின் சமூக சேவை மன்றத்திலிருந்தும் தேசிய தொடக்கக் கல்லூரியிலிருந்தும் மாணவத் தொண்டூழியர்கள் ஊழியர்களுக்கான சாவடிகளில் சேவையாற்றினர்.
தீபாவளி இனிப்புகளை அடையாளம் காணுதல், தாய்நாட்டிற்குப் பணம் அனுப்புதல், வேலையிடத்தில் பாதுகாப்பாக இருத்தல் சார்ந்த சாவடிகளும் இடம்பெற்றன.
தீபாவளியையொட்டி பிரபல அனைத்துலகப் பாடகர்களின் கலாசார நிகழ்ச்சிகளோடு, பிரியாணி வழங்குதல், விளையாட்டுகள், குலுக்கல் போன்றவற்றையும் ஊழியர்களுக்கான பொழுதுபோக்கு மையங்களில் நடத்தியுள்ளது ‘ஏஸ்’ குழு.
நவம்பர் 5ஆம் தேதி இந்திய மரபுடைமை நிலையத்துக்கும் ஊழியர்களை அக்குழு அழைத்துச் சென்றது.
நவம்பர் 18ஆம் தேதி ‘அகாஷியா’ தங்குவிடுதி ஊழியர்களை புக்கிட் பாத்தோக் கிழக்குச் சமூக நிலைய தீபாவளி நிகழ்ச்சிக்கும் அது அழைத்துச் செல்லும். 2022 முதல் இது நடைபெற்று வருகிறது.