2008ல் தினேஷ் குமார் தங்கவேலு இரு மாடி படிக்கட்டுகளை ஏறியதும் அவருக்கு மூச்சுவாங்கியது.
கடுமையான தலைவலியோடு, வலது கண்ணில் ‘ஃபுலோடர்ஸ்’ எனப்படும் உருவங்களும் தெரியத் தொடங்கியதால் மருத்துவ உதவியை அவர் நாடினார். அப்போது அவருக்கு வயது 31.
அவருக்குக் கடும் நிணவணு ரத்தப் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
“என் உயர்நிலைப் பள்ளிப் பருவத்தில் ஒருவர் ரத்தப் புற்றுநோயால் இறந்திருந்தார். அதனால் என் முதல் எண்ணமும் நான் இறந்துவிடுவேன் என்பதே,” என்றார் தினேஷ்.
செய்தியைக் கேட்ட அதிர்ச்சியில் அவரது கண்முன்னே மயக்கம் போட்டு விழுந்தார் அவருடைய மனைவி.
“என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. வேதனையாக இருந்தது,” என நினைவுகூர்கிறார் தினேஷ்.
இரு பிள்ளைகளுக்குத் தந்தையான அவரது மன அலையில் எத்தனையோ கேள்விக்குறிகள்.
“எனக்கு இன்னும் எத்தனை நாள்கள் இருக்கின்றன; என் குடும்பத்தைத் தயார்ப்படுத்த என்ன செய்வது?” போன்ற வினாக்கள் ஓயாமல் எழுந்தன.
“மருத்துவர், தாதியர் எங்களுக்கு அனைத்தையும் தெளிவாக விளக்கியதும் மனம் சற்று சாந்தமடைந்தது,” என நினைவுகூர்கிறார் அவர்.
அடுத்த ஆறு மாதங்களுக்கு சிகிச்சை மேற்கொண்ட தினேஷ், மருத்துவமனைக்கு அடிக்கடி வந்து செல்ல வேண்டியிருந்தது.
இறுதியில், 2008 அக்டோபர் 9ஆம் தேதி இரு வெளிநாட்டு நன்கொடையாளர்களிடமிருந்து தொப்புள் கொடி ரத்த மாற்று பெற்றார் தினேஷ்.
அப்போதிலிருந்து இன்றுவரைப் புற்றுநோய் திரும்பவில்லை.
அன்பானவர்களை ஆபத்தில் அறியலாம்
இல்லத்தரசியான அவருடைய மனைவி ராஜலெட்சுமி, மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க பகுதி நேர துணைப்பாட ஆசிரியராகவும் பணிபுரியத் தொடங்கினார். அன்றாடம் மருத்துவமனைக்கு வீட்டில் சமைத்த உணவை எடுத்துவருவார்.
தினேஷின் பிள்ளைகளும் அவர் முன் தங்கள் அச்சத்தை மறைத்தனர். அவர்களைப் பார்த்துக்கொள்ள தினேஷின் மாமியார் அவரது வீட்டிலேயே தங்கினார். தினேஷின் பெற்றோர், நண்பர்களும் அவரை உற்சாகப்படுத்தினர்.
காவல்துறையும் அவருக்கு நெடுங்கால மருத்துவ விடுப்பை எளிதாக எடுக்க உதவியது.
“புற்றுநோய் என்பது உங்களுக்கு என்றுமே நடக்காது என எண்ணாதீர்கள். வெள்ளம் வருமுன் அணைகோல வேண்டும். காப்பீடு எடுங்கள், குடும்பப் பிணைப்பை வலுப்படுத்துங்கள்,” என்கிறார் தினேஷ்.
அவர் மருத்துவக் காப்பீடுகளை எடுத்திருந்ததால் மருத்துவமனையில் தங்கிய செலவுகள் அவற்றில் அடங்கின. தாம் குணமடைந்ததும், தன் குடும்பத்தினருக்கும் அவர் உடனே மருத்துவக் காப்பீடு எடுத்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான நிதி
அன்று தினேஷுக்கு சிகிச்சை வழங்கிய புற்றுநோய்க் கழகம், 2008ல் ‘என்சிஐஎஸ்’ எனும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகப் புற்றுநோய் நிலையம் என மறுபெயரிடப்பட்டது.
சிங்கப்பூரின் பொது மருத்துவக் கட்டமைப்பில் இன்று மூன்றில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு ‘என்சிஐஎஸ்’ சிகிச்சை வழங்குகிறது.
சென்ற ஆண்டு நவம்பர் 4, 5ஆம் தேதிகளில் நடந்த ‘என்சிஐஎஸ்’ 15வது ஆண்டு நிறைவு விழாவில் ‘என்சிஐஎஸ் எதிர்கொள்ளும் புற்றுநோய்’ எனப்படும் இணையக் கைத்தொலைபேசி விளையாட்டு அறிமுகமானது.
விளையாட்டை https://fightscancer.sqkii.com/ இணையத்தளத்தில் காணலாம்.
இவ்விளையாட்டு, புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, ‘என்சிஐஎஸ்’ புற்றுநோய் நிதிக்கு நிதியும் திரட்டுகிறது.
2016ல் தொடங்கப்பட்ட இந்நிதி இதுவரை 440 நோயாளிகளுக்கு கிட்டத்தட்ட $1.8 மில்லியன் வழங்கி உதவியுள்ளது, புதிய மருத்துவச் சோதனைகளுக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கும் ஆதரவளித்து வருகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் $20 மில்லியன் திரட்டுவதை இது இலக்காகக் கொண்டுள்ளது.