உலகையே சிங்கப்பூரின் தேசிய விளையாட்டரங்கில் இணைத்துள்ளது டெய்லர் சுவிஃப்ட்டின் இசை.
இலங்கையிலிருந்து தாய் - மகள், கோலாலம்பூரிலிருந்து இரு சகோதரிகள், ஆஸ்திரேலியாவிலிருந்து கணவன் - மனைவி - இப்படி டெய்லர் சுவிஃப்ட் இசைநிகழ்ச்சியைக் காண வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்திருந்தனர்.
சிங்கப்பூருக்கு வரும் இந்த பன்னாட்டு ரசிகர் கூட்டம், சுவிஃப்ட்டுக்காக சிங்கப்பூர் வழங்கிய மானியத்தால் விளைந்த பலன்களைப் பறைசாற்றுகின்றது.
பொருளியலை உருமாற்றும் நிகழ்ச்சி
சுவிஃப்ட் தென்கிழக்காசியாவில் சிங்கப்பூரில் மட்டும்தான் நிகழ்ச்சி நடத்துவதால் பலரும் அவரைக் காண இங்குப் பயணம் செய்துள்ளனர்.
மேடையிலிருந்து 13 வரிசை தள்ளி, சுவிஃப்ட்டை அமர்ந்தபடியே காண ‘விஐபி-1’ நுழைவுச்சீட்டுகளுக்கு ஆளுக்கு S$1,200 செலவழித்தனர் ஹாங்காங்கிலிருந்து வந்த 23 வயது சாயும் அவரது தோழியும்.
“கடந்த ஏழு ஆண்டுகளாக சுவிஃப்ட் பாடல்களைக் கேட்டுவருகிறேன். சுவிஃப்ட்டுக்கு இருக்கும் தீவிர ரசிகர்களை நேரில் காண விரும்பி இங்கு வந்தேன்,” என்றார் சாய்.
தங்குவிடுதிக் கட்டணமாக ஒரு நாளைக்கு S$300 கொடுப்பதாக அவர் கூறினார்.
‘விஐபி’ அல்லாத சாதாரண நுழைவுச்சீட்டுகளுக்கு மொத்தம் S$2,700 கொடுத்து தன் பெற்றோருடன் இந்தியாவிலிருந்து வந்துள்ளார் 28 வயது ஆயுஷி.
“நாங்கள் இங்கு எட்டு நாள்கள் இருக்கப் போகிறோம். சிங்கப்பூருக்கு எங்களிடமிருந்து நிறைய பணம் செல்கிறது,” என சிரிப்புடன் கூறினார் ஆயுஷி.
முந்திக்கொண்ட சில சிங்கப்பூரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம். 20 வயது தேவன், S$200க்கு ஐந்தாம் பிரிவு நுழைவுச்சீட்டைப் பெற்றார். ஒன்பதாம் பிரிவு நுழைவுச்சீட்டுகளை மறுவிற்பனையாளரிடமிருந்து S$300க்குப் பெற்றதாகவும் இருவர் கூறினர்.
‘சுவிஃப்ட் சிறந்த முன்மாதிரி’
குரலையும் தாண்டி, குணாதிசயங்கள், உடை, பாடல்வரிகள், அனைத்துக்கும் ‘சுவிஃப்ட்டீஸ்’ எனும் தனி ரசிகர் கூட்டமே ஒவ்வொரு நாட்டிலும் இருக்கிறது.
‘அவர் தன்னடக்கமானவர். இன்றைய நிலையை எட்ட அவர் கடுமையாக உழைத்துள்ளார். பெண்களுக்கு அவர் பெரிய ஊக்கசக்தி,” என்றார் நிகழ்ச்சிக்குச் சென்ற ஹசுவினி இளங்கோவன், 30.
‘சுவிஃப்ட் பாடல்வரிகளோடு அனைவராலும் இணையமுடியும்.” என்றார் பிரனதி, 19.
இளையர்களின் மனப்போக்கை மாற்றும் ஆற்றல் சுவிஃப்ட் பாடல்களுக்கு இருப்பதாகவும் சிலர் கூறினர்.
“இங்கு வந்து இத்தனை தாராள மனம் படைத்த மக்களின் முன்னிலையில் இவ்வளவு பெரிய இசைநிகழ்ச்சியைப் படைப்பது என்னை நெகிழச் செய்கிறது,” என நன்றி கூறினார் சுவிஃப்ட்.
மோசடிகளில் ஏமாந்த ‘சுவிஃப்ட்டீஸ்’
சமூக ஊடகங்களில் சில ‘சுவிஃப்ட்டீஸ்’, நுழைவுச்சீட்டு மோசடிகளில் ஏமாந்ததாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். இதனால் ‘கேரசல்’ தளம், பிப்ரவரி 23 முதல் மார்ச் 9 வரை சுவிஃப்ட் நுழைவுச்சீட்டு விற்பனைக்குத் தடைவிதித்துள்ளது.