வானூர்திகள் இயங்கும் ‘ஸ்மார்ட் சிட்டீஸ்’ஸை உருவாக்க ‘சிஎன்ஆர்எஸ்’ எனும் பிரெஞ்சு ஆய்வு நிலையத்துடனும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்துடனும் இணைந்து ‘டெகாட்’ திட்டத்தை ‘தேலஸ்’ நிறுவனம் மேற்கொள்கிறது.
இத்திட்டத்தின் மூலம் வானூர்திகளுக்கு இடையே தரவுப் பரிமாற்றம், கட்டடங்களுக்கு அருகே காற்றுக் கொந்தளிப்பைச் சமாளித்தல் போன்றவை குறித்த ஆய்வுகள் அடங்குகின்றன.
வானூர்திப் போக்குவரத்தை நிர்வகிக்க ‘ஸ்கேல்ஃபிலைட்’, ‘டாப்ஸ்கை’ போன்ற மின்னிலக்கத் தளங்களையும் தேலஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
“விமானங்கள், ஆளில்லா வானூர்திகளின் போக்குவரத்தை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் ஆய்வில் இறங்கியுள்ளோம்,” என்றார் தேலஸ் நில, வான் கட்டமைப்புகளின் நிர்வாகத் துணைத் தலைவர் ஹர்வ் டமான்.
சீரான விமானப் பாதை கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும்
சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமும் ‘தேலஸ்’ நிறுவனமும் இணைந்து 2019ல் தொடங்கிய விமானத் துறைப் புத்தாக்க ஆய்வு நிலையம் விமானம் சீராக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்குமான தொழில்நுட்பத்தை மேம்படுத்துகிறது.
இத்தகைய மேம்பாடுகளால் நீண்ட விமானப் பயணங்களில் 11% வரை, குறுகிய பயணங்களில் 14.7% வரை கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கலாம் என தேலஸ் கணிக்கிறது. மேலும், கரியமில வாயு அல்லாத வெளியேற்றத்தையும் இது குறைத்து சுற்றுப்புறத்தைக் காக்கும் என கூறுகிறது தேலஸ்.
“விமானம் படிப்படியாகத் தரையிறங்கும்போது எரிபொருள் வீணாகிறது.
“இதனால், விமான நிலையத்தை நெருங்கும்போதே தரவுகளைப் பொறுத்து விமானம், வேகத்தை சரிசெய்தால் தொடர்ச்சியாகத் தரையிரங்க முடியும். இது எரிபொருள் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கும்.
“சில விமானங்கள், விமான நிலையங்களின் மின்னிலக்கக் கட்டமைப்புகள் நவீனமானவை; மற்ற சில பழமைவாய்ந்தவை. அனைத்துத் தரப்பினருக்கும் பொருந்தும் தீர்வை வழங்குவதை எதிர்நோக்குகிறோம்,” என்றார் தேலஸ் வான்பயண மின்னணுவியல் நிர்வாகத் துணைத் தலைவர் யானிக் அசுவாத்.