‘தபேலா முருகையா’ எனும் புனைபெயரில் அக்காலத்தில் தபேலா வாசித்துவந்த திரு நாகலிங்கம் வீரமுத்து, 78, இசையுலகில் புகழ் பெற்றவர். ஃபெப்ரா, சங்கம் பாய்ஸ், மறுமலர்ச்சி முதலிய இசைக்குழுக்களில் பல்லாண்டுகளாக வாசித்தவர்.
சிங்கப்பூரில் புகழ்பெற்ற ‘வசந்தம் பாய்ஸ்’ குழுவின் முகமது நூர், முகமது பஷீர், முகமது ரஃபி, ‘மறுமலர்ச்சி’ குழுவின் தலைவர் ரவிஷங்கர் ஆகியோரின் குருவாக விளங்கியவர் திரு நாகலிங்கம்.
அவருடைய மனைவி திருமதி லலிதா, 69, 1970களில் உள்ளூர்த் தொலைக்காட்சி மற்றும் வானொலிப் பாடகர். மலேசிய நிகழ்ச்சிகளிலும் பாடியவர். அவர் வீட்டில் பக்திப் பாடல்கள் பாட, திரு நாகலிங்கம் தபேலா வாசிக்க, ஏழெட்டு வயதிலிருந்தே இசையில் ஊறி வளர்ந்தார் அவர்களின் மகன் குமரன்.
குமரனின் பெற்றோர் விதைத்த இசையார்வம் மரமாகி, மேலும் மூன்று விதைகளை விதைத்தது. இன்று 43 வயது குமரனின் மூன்று பிள்ளைகளும் இசைப் பிரியர்கள்.
குமரனைப் போலவே 16 வயது சர்வேஷ்ராம், 14 வயது தனேஷ்ராம் இருவரும் டோல்கி, தபேலா, மிருதங்கம், தவில் ஆகிய கருவிகளில் வல்லமை பெற்றுள்ளனர். 8 வயது தனுஸ்ரீ ஜால்ரா தாளத்தோடு வாசிக்கிறார். அவரை வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கும் அனுப்பவிருக்கிறார் குமரன்.
பெற்றோர்வழி பிள்ளைகள்
“என் பெற்றோரின் தாக்கத்தால் என்னால் இயற்கையாகவே தோல்கருவிகள் வாசிக்க முடிந்தது, பஜனைகளில் பாடவும் முடிந்தது. என் பெற்றோர் என்னை இந்திய நுண்கலைக் கழகத்தில் வகுப்புகளுக்கு அனுப்பினர்,” என நினைவுகூர்ந்தார் குமரன்.
மக்கள் கழகத் தன்னுரிமை இசைக் கலைஞர்களாக தந்தை-மகன் சிங்கே ஊர்வலம், ‘மில்லெனியம் 2000’, ‘எஸ்பிளனேட்’ திறப்பு விழா ஆகியவற்றுக்கு இணைந்து வாசித்தனர்.
‘விண்ணொளி’ இசைக்குழுவிற்கு டிஎம்எஸ்-எல்.ஆர்.ஈஸ்வரி கச்சேரியிலும் சேர்ந்து வாசித்தனர்.
“நான் பஜனைகளிலும் வாசிப்பதைக் கண்டு என் பிள்ளைகளுக்கும் தோல்கருவிகள்மீது ஆர்வம் ஏற்பட்டது,” என்றார் தன் இரு மகன்களுக்கும் தவில் கற்றுக் கொடுத்த குமரன்.
சர்வேஷ்ராம், தனேஷ்ராம் இருவரும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் அன்றாடம் சற்று நேரம் தோல்கருவி வாசித்தபின்புதான் அடுத்த வேலைக்குச் செல்வர். அந்த அளவிற்கு இசைமோகம்.
இசையால் இறுகிய பிணைப்பு
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமை மாலைகளிலும் குமரனின் வீட்டில் தவறாமல் பஜனைகள் நடைபெறும். அவற்றில் முடிந்தவரை திரு நாகலிங்கமும் வந்து கலந்துகொள்வார்.
ஜெய் மாருதி பக்த சமாஜத்தில் குமரனும் பிள்ளைகளும் தைப்பூசம், தீமிதி போன்ற திருவிழாக்களில் வாசித்து வருகின்றனர். அடுத்தது பங்குனி உத்திரத் திருவிழாவிலும் வாசிக்கவுள்ளனர்.
திரு நாகலிங்கம், திருமதி லலிதாவைத் தாத்தா பாட்டி என்ற உறவுமுறைக்கும் மேலாகத் தங்கள் இசைத்திறனின் பிறப்பிடமாக பேரப்பிள்ளைகள் அரவணைக்கின்றனர்.
“என் பெற்றோர்தான் எங்கள் குரு, எங்கள் இசையுலகின் ஆணிவேர்கள்,” என்று பெருமிதத்துடன் கூறினார் குமரன்.