தமிழ்த் திரையுலகிலும் தமிழ் இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என்று போற்றப்படும் வாலி அவர்களின் பாடல்களை ஆய்ந்தறியும் நோக்கில், ‘தலைமுறை தாண்டியும் வாலி’ என்னும் கருத்தரங்கு மார்ச் 17ஆம் தேதி கான்பரா சமூக மன்றத்தில் தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
கிட்டத்தட்ட 80 பேர் கலந்துகொண்ட இந்தக் கருத்தரங்கின் தலைவராகச் சிங்கப்பூர் சமூக அறிவியல் பல்கலைக்கழத்தின் இணைப்பேராசிரியர் முனைவர் சரோஜினி செல்லக்கிருஷ்ணன் வழிநடத்தினார்.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத்தின் ஆதரவோடு இயங்கும் பேச்சாளர் மன்றங்களைச் சார்ந்த பேச்சாளர்களைக் கொண்டு ஐந்து பாடல்களுடன் நிகழ்ச்சி சிறப்பாகத் துவங்கப்பட்டது.
பாடகர்களாக மாணவி செ. மோகனா, அசோக்குமார், இரா. செல்வகுமார், ச. மாணிக்கவாசகம், இரா. இராதிகா உள்ளிட்டோரும் பேச்சாளர்களாக மு. குமுதபிரியா, மூ. கேத்திரபாலன், வெ.அனுராதா, ர. சௌமியலெட்சுமி, கார்த்திக் சிதம்பரம் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தமிழ்மொழிப் பண்பாட்டுக் கழகத் தலைவர் திரு.ஹரிகிருஷ்ணன் முத்துசாமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
கான்பரா சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழுவின் தலைவர் திருமதி மல்லிகா சரவணன் சிறப்பு விருந்தினர்களுக்குப் பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்தார்.
நிகழ்ச்சி, கவிநயம் நிறைந்த பாடல்களோடும் விளக்கங்களோடும் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது.
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு இத்தகைய கருத்தரங்குகளைத் தொடர்ந்து நடத்த இருப்பதாகவும் நிகழ்ச்சியின் தலைவர் தெரிவித்தார்.
திரு.கார்த்திக் சிதம்பரம் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தார்.
தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத்தின் வரலாறு மற்றும் நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தை பேச்சாளர் தேசிங்குராஜன் தியாகராஜன் எடுத்துரைத்தார்.
பாடகர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பேச்சாளர் இரா. செல்வகுமார் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது.