போர், பருவநிலைப் பேரிடர்களால் வறுமையாலும் பசியாலும் அவதியுறும் சிறுவர்களின் சவால்களை இளையர்களிடம் அனுபவ ரீதியாக உணர்த்தும் முகாம் ஒன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
‘வோர்ல்டு விஷன் சிங்கப்பூர்’ ஆண்டுதோறும் உணவுப் பஞ்சத்தை உணர்த்த நடத்தும் 30 மணி நேர முகாம், இவ்வாண்டு மே 18, 19ஆம் தேதிகளில் ஃபோர்ட் கேனிங் பூங்காவில் நடைபெறவுள்ளது.
இவ்வாண்டு முகாமின் கருப்பொருள் ‘பசியால் வரும் சோதனைகள்’.
மே 18ஆம் தேதி நண்பகல் 12 மணிக்குத் தொடங்கி, மே 19ஆம் தேதி மாலை 6 மணி வரை முகாம் நடைபெறும்.
முகாமின் முக்கிய அங்கமாக, தடைகள் நிறைந்த பாதையை இளையர்கள் கடக்கவேண்டும். துணிகளையும் பொருள்களையும் கொண்டு தற்காலிகத் தங்குமிடத்தையும் அவர்கள் அமைக்கவேண்டும்.
போர் மூண்ட இடங்களிலிருந்து இடம்பெயரும் மக்களின் இன்னல்களை இந்நடவடிக்கைகள் உணர்த்தும்.
பல தடயங்கள்மூலம் பசியிலிருந்து விடுபட ‘எஸ்கேப்’ விளையாட்டும் நடைபெறும். உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பஞ்ச நிலவரத்தை இது தெரியப்படுத்தும்.
சில நாடுகளில் சிறுவர்கள் தண்ணீர்க் குடங்களை ஆற்றங்கரையில் நிரப்பி, சுமந்தவாறு வெகுதூரம் நடப்பதையும் பங்கேற்பாளர்கள் அனுபவபூர்வமாக அறியலாம்.
“சிங்கப்பூரில் பசி என்பதற்கான பொருளைப் பெரும்பாலானோர் அறியாமல் உள்ளனர். பசியின் முழு பாதிப்பை அறியாத அளவிற்கு பல அரசாங்க உதவித் திட்டங்களும் உள்ளன.
“ஆனால் உலகின் பல பகுதிகளில், பள்ளிக்குச் சென்றால்தான் சிறுவர்களுக்கு ஒரு வேளை உணவாவது கிடைக்கும்,” என்றார் வொர்ல்டு விஷன் சிங்கப்பூரின் விளம்பரப் பிரிவின் மூத்த நிர்வாகி ரேஷ்மி சுரேஷ், 28.
இம்முகாமிற்கு 13 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஐவர் அடங்கிய குழுவாகவோ தனியாகவோ மே 3ஆம் தேதிக்குள் பதிவுசெய்யலாம். முகாமிற்கான கட்டணம் $45.
இதன்வழி திரட்டப்படும் நிதி வோர்ல்டு விஷன் சிங்கப்பூரின் அனைத்துலக பசித்தீர்வு திட்டங்களுக்குத் துணைபுரியும்.
இவ்வயது வரம்பிற்கு அப்பாற்பட்டவர்களும் பங்குபெற விரும்பினால் youth@worldvision.org.sg மின்னஞ்சல்வழி தொடர்புகொள்ளலாம். மேல்விவரங்களுக்கு www.worldvision.org.sg/30HFC2024 இணையத்தளத்தை நாடலாம்.