ஆசியான் அறக்கட்டளை, தெற்காசிய நாடுகளின் மின்னிலக்கக் கல்வியறிவு, விழிப்புணர்வு, தயார்நிலை விகிதங்கள் குறித்த ஆய்வறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு நாட்டிலும் முதியோர், ஆசிரியர்கள், இளையர்கள், சமூகத் தலைவர்கள் ஆகியோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதன்முடிவில் அந்தந்த நாட்டின் பொதுவான திறனாய்வுச் சிந்தனை, தனிநபர் ரகசியப் பாதுகாப்புத் திறன், தகவல்கள் குறித்த தெளிவு, செய்திப் பகிர்வில் நம்பிக்கை, சமூக ஊடகங்களின் மீதான நம்பிக்கை ஆகியவை குறித்த விகிதங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் குறிப்பாக, தனிநபர் ரகசியப் பாதுகாப்புத் திறனில் சிங்கப்பூர் முதலிடம் வகிப்பதாகத் தெரிகிறது. பிற அம்சங்களில் சிங்கப்பூர் ஏறத்தாழ 50 விழுக்காட்டை எட்டியுள்ளதையும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்கப் பயன்பாட்டை நடைமுறைப்படுத்துவதை ஒட்டி ஒவ்வொரு நாடும் வேறுபட்ட சிக்கல்களை எதிர்கொள்வதாகவும் இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அவற்றைக் கண்டறிந்து, நேர்மறை மின்னிலக்கப் பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலமே அதிலுள்ள சிக்கல்களுக்குத் தீர்வு காண முடியும்.
அனைவரையும் உள்ளடக்கிய மின்னிலக்கப் பயன்பாட்டின் முக்கியச் சிக்கல், தவறான தகவல் பரவுதல். பெரும்பாலோர் எவ்வித உள்நோக்கமும் இல்லாவிட்டாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவற்றைப் பரப்புவதாகத் தெரிகிறது.
குறிப்பாக, சிங்கப்பூரில் தொடர்பு, தகவல் அமைச்சு, தேசிய நூலக வாரியம், தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து அனைவருக்கும் மின்னிலக்கத் தளங்களை அணுகுந்தன்மையை உறுதிசெய்யத் தேவையான திட்டங்களையும் செயல்பாடுகளையும் வழிநடத்துகிறது. செய்தொழிலில் தொழில்நுட்பப் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் தொடங்கி, பல உத்திகளைச் செயல்படுத்துகிறது.
சமூகப் பங்காளிகளுடன் இணைந்து மூத்தோரிடம் மின்னிலக்கப் பயன்பாட்டை ஊக்குவிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ‘மூத்தோர் தகவல் தொடர்புச் சந்திப்புமுனைகள்’ எனும் மின்னிலக்கக் கல்வி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
எனினும், சமூகத்தில் பரவும் தவறான தகவல்களும் தொழில்நுட்பம் தொடர்பான சிக்கல்களும் சமூகத்தின் பொருளியல், பாதுகாப்பு, சுகாதாரம் எனப் பலவற்றைப் பாதிக்கலாம் என்கிறது இந்த ஆய்வு.
அவற்றை அடையாளம் கண்டு, பாதிக்கப்படக்கூடிய, பின்தங்கிய மக்களுக்கு மின்னிலக்கக் கல்வியறிவை மேம்படுத்த, அரசாங்கத்துடன் சமூகமும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறது இந்த ஆய்வு முடிவு.