இலக்கிய உலகின் ஒப்பிலா மணிகளாகத் திகழும் கம்பரின் கவிமொழிகளை பரதநாட்டிய அங்கங்களின் மூலம் ‘மகூலம் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, ‘கம்பனின் கவியாற்றல்’ என்ற நிகழ்ச்சி வாயிலாக வெளிக்கொணர்ந்தது.
சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் (சிஃபாஸ்) ஏப்ரல் 6ஆம் தேதி இந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் வடிவமைப்பு கடந்த ஆண்டு நவம்பரிலிருந்து தொடங்கியதாக ‘மகூலம் ஆர்ட்ஸ்’ பள்ளி இயக்குநர் ஆ.மீனலோசனி தெரிவித்தார்.
“இரண்டு மாதங்களாக நடனப் பயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஐந்து தனி நடனமணிகளும் ஐந்து குழு நடனமணிகளும் நிகழ்ச்சியில் இடம்பெற்றனர். பள்ளிக்கு வெளியிலிருந்தும் நடனமணிகள் பயிற்சியில் இணைந்தனர்,” என்று திருவாட்டி மீனலோசனி கூறினார்.
நிகழ்ச்சியில் கம்பரின் 10 வெண்பாக்கள் பயன்படுத்தப்பட்டன. அருணாச்சல கவிராயரின் ராம நாடகக் கீர்த்தனைகளில் ஐந்து தேர்ந்தெடுக்கப்பட்டன. சங்கீத பிரியர்கள் நன்கு தெரிந்துள்ள தியாகராஜரின் தெலுங்கு கீர்த்தனைகளும் இந்நிகழ்ச்சிக்குத் தித்திப்பு சேர்த்தன.
ராமாயணத்தில் மாறுவேடம் பூண்டு ஒயிலாக அசைந்துவரும் அழகிய சூர்ப்பணகையை வர்ணிக்கும் ‘பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர்’ என்ற பாடலில் கூறப்படும் வர்ணனைகளைப் படித்து அவற்றைப் புரிந்து உள்வாங்கி அதற்கெற்ப நடனம் ஆடியது தமக்கு சுவைமிகுந்த கற்றல் அனுபவமாக இருந்ததாக திருவாட்டி மீனலோசனி கூறினார்.
கும்பகர்ணனைப் படைவீரர்கள் எழுப்புவதை வர்ணிக்கும் ‘உறங்குகின்ற கும்பகன்ன’ பாடலுக்காக தம் மாணவிக்கு நடனத்தை வடிவமைத்ததையும் திருவாட்டி மீனலோசனி குறிப்பிட்டார்.
கம்பர் மொழிகளைப் பருகி ராமபிரான் மீதுள்ள பக்தியாலும் பல்வேறு பாடல்களைப் புனைந்த 18ஆம் நூற்றாண்டு புலவர் அருணாச்சல கவிராயரின் ராமநாடகக் கீர்த்தனைகளும் இந்நிகழ்ச்சியில் இடம்பெற்றன.
கர்நாடக சங்கீதத்தில் தமிழில் பாடல்களை இயற்றிய ஆதி மும்மூர்த்திகளில் ஒருவரான அருணாச்சல கவிராயரின் கீர்த்தனைகளுக்கும் கம்பரின் பாடல்களுக்கும் உள்ள ஒற்றுமைகளை இந்நிகழ்ச்சி காண்பித்தது.
நடன நிகழ்ச்சிக்கு முன்னதாக, மார்ச் 23ஆம் தேதி கம்பர் பற்றிய கட்டுரைப் போட்டி ஒன்றையும் அந்தப் பள்ளி நடத்தியது. பத்துப் பேர் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஐந்து பேருக்கு ஏப்ரல் 6ஆம் தேதி ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
‘ஆற்றல்’ என்ற தமிழ் மொழி விழாவின் கருப்பொருளை ஒட்டி கம்பரின் ஈடு இணையற்ற கவியாற்றலை வெளிப்படுத்த வேண்டும் என்று இந்நிகழ்ச்சிக்கான யோசனையைத் தந்த திருவாட்டி வள்ளிமயில் கூறினார்
கவிதையின் கருப்பொருளுக்கு ஏற்ற வகையில் இசை அமைப்பதற்குப் பதிவு செய்ய திருவாளர்கள் லாஸர், குணா ஆகியோர் உதவியதாக திருவாட்டி வள்ளிமயில் கூறினார்.
கவிதைகளை சரியான ஏற்ற இறக்கத்துடன் வாசிப்பவர்கள் இருந்தாலும் அது நாட்டியத்திற்கு ஏற்ற விதமாக எல்லோராலும் வாசிக்க முடியவில்லை என்று திருவாட்டி வள்ளிமயில் கூறினார்.
“இறுதியில், பொருத்தமாக வாசிக்க முடிந்த பாட்டு ஆசிரியர் லாவண்யா பாலாவை நாங்கள் தேர்ந்தெடுத்தோம்,” என்றார் அவர்.