பொருள் விற்பனை, முதலீட்டு வாய்ப்புகள் போன்ற வழிகளில் 100,000 வெள்ளிக்கு மேல் பலரிடம் மோசடி செய்த பெண்ணுக்கு 35 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
நிகீல் லிம் ஷி ஹுய், 31, என்ற அப்பெண், தன்மீது சுமத்தப்பட்ட ஏழு ஏமாற்றுக் குற்றச்சாட்டுகளையும் இரண்டு நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.
முன்னதாக, 2018 அக்டோபர் 15 முதல் 2019 ஏப்ரல் 24 வரை லிம் தண்டனைக் குறைப்பு உத்தரவின்கீழ் இருந்தார். ஆனால், விதியை மீறி அக்காலகட்டத்திலும் அவர் குற்றம் புரிந்ததால் மேலும் 40 நாள்கள் அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு, மின்வணிகத்தளமான கெரோசலில் யுனிவர்சல் ஸ்டுடியோஸ் சிங்கப்பூர் நுழைவுச்சீட்டுகள் இருப்பதாகவும் 55 வெள்ளிக்கு அவற்றை விற்பதாகவும் லிம் குறிப்பிட்டிருந்ததாகக் கூறப்பட்டது. அவ்விளம்பரத்தைக் கண்ட 12 பேர் மொத்தம் 2,305 வெள்ளியை அவருக்கு அனுப்பினர்.
உண்மையில், லிம்மிடம் அந்த நுழைவுச்சீட்டுகள் இல்லை என்று அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுனில் நாயர் நீதிமன்றத்தில் கூறினார்.
அதன்பின் 2020ல் தன்னிடம் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் இருப்பதாக கெரோசல் இணையத்தில் லிம் விளம்பரம் செய்தார்.
அதனைக் கண்ட ஒருவர், நான்கு கைக்கடிகாரங்கள் வேண்டும் எனக் கூறி, முன்பணமாக 5,000 வெள்ளியை லிம்மிடம் தந்தார்.
அப்போதும் அவரிடம் ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள் எதுவும் இல்லை என்று கூறப்பட்டது.
மேலும், தொழில் தொடங்குவதாகக் கூறி, தன் சக ஊழியர் ஒருவரிடம் 2020 மே - ஜூலை மாதங்களுக்குள் பலமுறை பணம் பெற்று, $60,000க்குமேல் லிம் ஏமாற்றியதாகச் சொல்லப்பட்டது.
இப்படி மொத்தம் 29 பேர் லிம்மிடம் ஏமாறியதாகவும் ஏமாற்றிப் பெற்ற பணத்தில் 6,500 வெள்ளியை அவர் திருப்பித் தந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றுக் குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்பட்டால், குற்றம் புரிந்தவருக்கு 10 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.