ஆண்டிறுதியை நெருங்கிவிட்டோம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து வரும் விடுமுறைகளை முன்னிட்டு விருந்துகளும் கொண்டாட்டங்களும் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இவ்வேளையில் கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களும் இந்த டிசம்பர் மாதத்தில் அதிகரித்துள்ளன.
கிருமியைக் காரணம் காட்டிக் கொண்டாட்டத்தை ரத்து செய்வதா என்பது குறித்து நிபுணர்கள் தங்களின் கருத்துகளைப் பகிர்ந்துகொள்கின்றனர்.
ஒன்றுகூடல் விருந்து ஒன்றுக்குச் செல்லவிருக்கும் நிலையில் உங்களுக்கு கொவிட்-19 இருப்பது உறுதிசெய்யப்படலாம். உடல்நலம் குன்றிய உணர்வு இல்லை என்றாலும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர்க்கவும்.
தொற்று இருப்பது உறுதியான பின்னர் பிறருடன் உறவாடுவது பொறுப்பற்ற செயல் என்கின்றனர் நிபுணர்கள். அவசியம் போக வேண்டும் என்றால் முகக்கவசம் அணிந்துகொண்டு, நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடித்து, மற்றவர்களுடன் அதிகம் உறவாடுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
உங்கள் வீட்டில் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்படும் நிலையில் உங்களுக்கே தொற்று இருப்பது உறுதியானால், கடைசி நிமிடம் என்றாலும் அந்த விருந்தை ரத்து செய்வதே சிறந்த தெரிவு.
நீங்கள் அறைக்குள் அடைந்து கிடப்பதாலோ முகக்கவசம் அணிந்துகொள்வதாலோ கிருமிப் பரவல் அபாயம் முழுமையாக நீங்கிவிடாது. அதனால், முன்னெச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.
கொவிட்-19 ஒரு மாதம் முன்னதாக தொற்றித் தற்போது நீங்கள் குணமடைந்துள்ள நிலையில் கூடுதல் தடுப்பூசி தேவையா எனச் சிலர் வினவலாம்.
தொற்றிலிருந்து குணமடைந்து மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் கழித்துத் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்துவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் அதுவே ஒருவரது நோய் எதிர்ப்புச் சக்திக்கு உதவும். அதனால், கூடுதல் தடுப்பூசியைக் குணமடைந்த உடனே போட்டுக்கொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
வீட்டில் இருந்தவாறு வேலை செய்யக்கூடியவர்கள், கொவிட்-19 சம்பவங்கள் குறையும்வரை அந்த ஏற்பாட்டைத் தொடரலாம்.
மேலும், பொதுப் போக்குவரத்தில் முகக்கவசம் அணிந்துகொள்வதால் கிருமிப் பரவலைக் குறைக்க முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது.