முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அன்பளிப்புகள் என்று வரும்போது அரசாங்க ஊழியர்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அரசாங்கச் சேவைக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் சான் சுன் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
திரு ஈஸ்வரன் 27 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். ஹோட்டல் நிர்வாகி ஓங் பெங் செங்கிடமிருந்து அன்பளிப்புகளைப் பெற்றதாக பெரும்பாலான குற்றச்சாட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டன.
பிரிமியர் லீக் காற்பந்து ஆட்டங்கள், கலைநிகழ்ச்சிகள், சிங்கப்பூர் கிராண்ட் பிரீ போன்றவற்றுக்கான நுழைவுச்சீட்டுகள் அன்பளிப்புகளில் அடங்கும்.
அரசாங்க ஊழியர்களுடனான சமூகக் கலந்துரையாடல்கள் குறித்த விதிமுறைகள் பற்றியும், அவை மறுஆய்வு செய்யப்படவேண்டுமா என்பதையும் ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எட்வர்ட் சியா, நீ சூன் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டெரிக் கோ, தஞ்சோங் பகார் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா ஆகியோர் கேள்வி எழுப்பினர்.
கல்வி அமைச்சருமான திரு சான் குறிப்பிட்ட சூழல்களில் செய்யவேண்டியவை பற்றியும் செய்யக்கூடாதவைப் பற்றியும் விளக்கினார்.
அரசாங்க ஊழியர்கள் அன்பளிப்புகளையோ உதவிகளையோ கேட்கலாமா என்ற கேள்விக்கு, திரு சான் அவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்று பதில் அளித்தார். குறிப்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் தொடர்பில் தாங்கள் எடுக்கும் முடிவுகள் பாதிக்கப்படும் என்றால் அவர்கள் அவ்வாறு செய்யக்கூடாது.
அரசாங்க ஊழியர்கள் அன்பளிப்புகளை நிராகரிக்க முடியாவிட்டால், அவர்கள் அவற்றைப் பற்றித் தெரிவித்து, நடப்பில் உள்ள செயல்முறைகளுக்கு ஏற்றவாறு அவற்றைப் பதிவு செய்யவேண்டும்.
ஓர் அன்பளிப்புக்கு அதன் மதிப்பை மதிப்பிட்ட பிறகு பணம் செலுத்தினால், அதனை வைத்துக்கொள்வதற்கு அவர்களுக்கு அனுமதி வழங்கப்படலாம்.
உணவுகளை அன்பளிப்பாகப் பெறுவதைப் பொறுத்தவரையிலும் அதே கொள்கைகள் பொருந்தும் என்றார் திரு சான்.
அரசாங்க ஊழியர்கள் தவறான, சந்தேகத்துக்குரிய நடைமுறைகள் பற்றி தங்கள் அமைப்புகளின் தலைவர்களிடம் தெரிவிக்கலாம் என்று திரு சான் கூறினார்.
ஈஸ்வரனின் வழக்கையொட்டி, விதிமுறைகள் மறுஆய்வுசெய்யப்படுமா என்ற கேள்விக்கு, திரு சான் பதிலளித்தார். அவர் மூன்று சூழ்நிலைகளை முன்வைத்தார்.
விதிமுறைகள் தெளிவாக இருந்தும் அவை மீறப்பட்டாலோ, புறக்கணிக்கப்பட்டாலோ, குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
விதிமுறைகள் தெளிவாக இல்லை என்றால், அவற்றுக்கு விளக்கம் அளிக்கப்பட வேண்டும். அவை எளிதாக்கப்படவேண்டும்.
விதிமுறைகள் போதிய அளவு கடுமையாக இல்லை அல்லது விதிமுறைகள் இல்லாத புதிய சூழ்நிலை சம்பந்தப்பட்ட சம்பவமாக இருந்தால், அந்த விதிமுறைகள் மாற்றப்பட வேண்டும்.
“இவற்றில் எது முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்குப் பொருந்தும் என்று அறிய, வழக்கின் உண்மையான விவரங்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். நீதிமன்ற வழக்கு விசாரனைக்கு முன்னர் இதனை நாம் முன்கூட்டியே தீர்மானிக்கக்கூடாது,” என்று திரு சான் கூறினார்.