செம்பவாங்கிலிருந்து அப்பர் தாம்சன், ஆர்ச்சர்ட் ரோடு வழியாக புக்கிட் மேராவுக்கு இயக்கப்படும் பேருந்துச் சேவை 167 ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 17) அன்று அரைமணி நேரத்திற்கு ஒருமுறை இயங்கத் தொடங்கின. கடந்த நவம்பர் மாதம் நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவித்த பல வழித்தட மாற்றங்கள் நடைமுறைக்கு வந்ததையடுத்து பேருந்துச் சேவை எண் 167 நீண்ட நேர இடைவெளியில் இயக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
டிசம்பர் 10ஆம் தேதி முதல் பேருந்துச் சேவை எண் 167 நிறுத்தப்படும் என நிலப்போக்குவரத்து ஆணையம் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தது. இந்தப் பேருந்து சேவை வடக்கு சிங்கப்பூரை நகரத்துடன் இணைக்கும் நேரடிப் பேருந்து என்பதால் அவ்வழித்தடத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதனால், அந்தப் பேருந்து சேவையைத் தக்கவைக்க முடிவு செய்துள்ளதாக கடந்த நவம்பர் 28ஆம் தேதி ஆணையம் தெரிவித்தது.
மேலும்,புதிய பயண வழித்தடங்களை முயற்சி செய்யவும் அதற்கு ஏற்றவாறு தங்கள் பயண நேரத்தை மாற்றியமைக்கவும் பயணிகளுக்கு அதிக காலம் தேவைப்படுவதால் இந்தப் பேருந்து நீண்ட நேர இடைவெளியில் இயக்கப்படும் எனவும் ஆணையம் அன்று குறிப்பிட்டது.